Tamil Poem: மாயவலை

Su.tha Arivalagan
Jun 18, 2026,10:19 AM IST

- பன்முகக் கவிஞர் க. முருகேஸ்வரி


சின்னஞ்சிறிய சிலந்தியின்...

சிறிய கூடு பற்றியே..

பெரிய ரகசியம் அறிவோமா!


கூடு தானே சிறியது...

கூடு உணர்த்தும்

பாடம் என்றும் பெரியது!


நூலைக் கொண்டு உருவாக்கிய 

நுட்பமான கூடு! நுணுக்கமான கூடு!


வலை வலையாய்ப் பிண்ணிய 

வலிமையான கூடு!


பூச்சிகளைச் சிக்க வைக்க 

புதுமையான வகையில் வடிவமைத்த கூடு!




கண்ணுக்குத் தெரியாத நூலில் 

கனகச்சிதமாய் கட்டிய கூடு!


ஓய்வு உறக்கம் இன்றி 

உழைப்பால் உண்டான கூடு!


முயற்சிக்கு இது தானே

முன்னுதாரணக் கூடு!


ஒரு நூல் பிரிந்தாலும் 

மீண்டும் கட்ட படும் பாடு...


பொறுமையையும் முயற்சியும் கொண்டு...


அங்கே படைத்திடும் அழகாய் அதே கூடு!


பொறுமையின் சிகரம்...


இடைவிடாத உழைப்பில் உயரம்....


மாயவலை பின்னும் விசித்திரமான வேலைக்காரன்


படிக்காத பொறியியல் பட்டதாரி


சுறுசுறுப்பைக் கற்றுக் கொடுக்கும் ஆசான்


முயற்சி ;பொறுமை; சுறுசுறுப்பு ;மனம் தளராமை....


மனித வாழ்க்கைக்குத் தேவையான மாண்புகளை...


 தினம் தினம் சொல்லும் தத்துவ ஞானி!


வாழ்வில் வளம்‌ பெற

சிலந்தியின் குணங்களை நாடு!


இனி முன்னேற தடையில்லை 

 சிலந்தி போல் சீக்கிரம் நீ ஓடு!


சிலந்திக் கூடு சிந்தனைக் கூடு!


மொத்தத்தில் சிலந்திக் கூடு 

நாம் கற்று உயர மிகச் சிறந்த ஏடு!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார். சிங்கப்பூர் பொழில் பண்பலையில் கவிதைகள் எழுதுகிறார்.. சிங்கப்பெண், அருந்தமிழ் தாரகை விருதுகள் பெற்றுள்ளார்).