என்னவள்!
- அ. தாமஸ்
நான் விரும்பி நேசிக்கும் திரையே;
நான் தொடர்ந்து வாசிக்கும் உரையே;
என்னை அன்பால் ஆட்கொண்ட சிறையே ;
என்னுள் நல்லெண்ணம் புகுத்திய மறையே ;
என்னை மகிழ்ச்சியால் நனைத்திட்ட மழையே ;
என் துன்பம் உதிர்த்த சாரலே ;
நான் கவிதையாய் நேசிக்கும் காவியமே ;
என் மனம் நிரம்பிய அழகோவியமே;
வாழிய நீ வாழியவே!
எனக்காய் உதிரம் உதிர்த்து உறவினில் கலந்தவள் நீ !
தினமும் என்னை நினைத்து உள்ளுக்குள் கனன்றவள் நீ !
கனவாய்க் களைந்தாலும் என் நினைவில் நிலைத்தவள் நீ!
நான் இமயம் அடைந்திட துணையாய் நின்றவள் நீ !
கலங்கி நின்ற போது கண்ணீர் துடைத்து கரம் கொடுத்தவள் நீ !
நான் வளங்கள் பல பெற்று நலமாய் வாழ்ந்திடவே
இறைவேண்டல் தினம் செய்தவள் நீ !
என் வரலாற்றைப் படிப்பவளும் நீ!
நாளைய உன் வரலாற்றைப் படைப்பவளும் நீ !
நல்மண மலரே! பலவண்ண மயிலே! என் எண்ண முகிலே!
நீ வேண்டும் வளங்களை வரங்களாய்ப் பெற்று
நலமோடு வாழ்ந்திடவே வாழ்த்தி மகிழ்கிறேன்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)