சிந்தனைச் சிதறல்.. காயும் கனியும் மட்டும் கருணை அல்ல.. நிழலும் காற்றும் வரமே!

Su.tha Arivalagan
Jun 30, 2026,03:32 PM IST

- அ.தாமஸ்


மரங்களே மகத்தானவை தான் . அவை தரும் காயும் கனியும் மட்டுமே கருணை அல்ல;அதன் தரும்  நிழலும் காற்றும் கூட உயிர் வாழ உதவிடும் உயர் வரம் தான். வெயிலின் உச்சத்தில் தான் நிழலின் மகத்துவம் உணரப்படுகிறது;மூச்சற்று மூர்ச்சையாகும் பொழுது தான் மரங்களின் மகிமையும் அறியப்படுகிறது.


காயும்,கனியும் கொடுக்கும் மரங்களுக்கு தண்ணீரும்,உரமும் முன்னும் பின்னும் ஊட்டி வளர்க்கும் நாம் நிழல் மட்டுமே தரும் மரங்களை நினைவில் கூட வைப்பதில்லை. காயும் கனியும் உயர்வானது தான் அதைவிட உயர்வானது நிழல் என்பதை ஏன் நாம் ஏற்க மறுக்கிறோம். வெளிப்படையாய் விளங்கவில்லை என்பதாலா? 


கனியையும், காற்றையும்; காயையும், நிழலையும்;மரங்களிடம் நிதம் நிதம் யாசிக்கிறோம். இவை தரும் மரங்களை வார்க்கவும், வளர்க்கவும் ஏன் யோசிக்கிறோம்? மரங்கள் இல்லாமல் இவை எதுவும் சாத்தியம் இல்லை என்பதை இன்னும் ஏன் நாம் உணரவில்லை? இவை வலி கொடுக்கா வரங்கள் என்பதாலா?


இன்று நாம் பெரும்பாலும் பலன் கொடுக்கா உறவுகளை மறுக்கிறோம். உயிருள்ள பல மரங்களையோ பயனற்றவை என்று அறுக்கிறோம். உண்மையில் பலன் கொடுக்காமல் அவை இல்லை அவற்றின் பலன்களை தான் நாம் உணராமல் இருக்கிறோம்; ஆம் வெளிப்படையாய் கிடைப்பதைத் தான் பலன் என்று நினைக்கிறோம். 




உறவும் மரமும் வெளிப்படையாய் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு நிலையிலும் உயரிய பல உதவியை உலகிற்கு வழங்கிக் கொண்டுதான் இருக்கிறது. எனவே  அதன் உதவியை நாம் உணராவிட்டாலும் அவை நம் ஒவ்வொருவர் வாழ்வின் வரம் தான்;நம் வளர்ச்சிக்கு உயரிய உரம் தான். எனவே தினம் தினம் அதன் மகத்துவம் யோசிப்போம்; அவற்றை ஒவ்வொரு நாளும் உயரிய அன்போடு நேசிப்போம்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)