சிந்தனைச் சிதறல்.. உரிமையென உணர்ந்து உணர்வோடு கொண்டாடுவோம்!

Su.tha Arivalagan
Aug 11, 2026,02:56 PM IST

- அ. தாமஸ்


மனித வாழ்க்கை பிள்ளைப் பருவத்தில் தொடங்கி, முதுமையிலும் பிள்ளைப் பருவமாகவே முடிகிறது. உணவு உண்ணவும், தனியாய் நடக்கவும் இயலாத நிலையில் தந்தையின் கரம் பற்றி நடை பயின்றோம்; தாயின் பராமரிப்பிலே வளர்ந்தோம்.


இன்று நாம் பெற்ற உதவியை வயது முதிர்ந்த நம் பெற்றோருக்கு திரும்பச் செலுத்த வேண்டியது நம் கடமை மட்டுமல்ல; உரிமையென உணர்ந்து அதை உணர்வோடு கொண்டாடுவோம். 


உழைப்பால் நம்மை உயர்த்தியவர்கள் உழைக்கும் நிலை கடந்து ஓய்வை நாடுகையில், அவர்களது மதிப்பை நாம் அறிவோம்; அவர்களது உழைப்பால் தான் இன்று நமது உழைப்பும் மதிப்பும் விளைந்தது என்பதை தினம் உணர்வோம்; அவர்கள் வீட்டிற்கு வீண் அல்ல என்றும் அவர்களே வீட்டைத் தாங்கிய தூண் என்பதை உள்ள நிறைவோடு ஏற்போம்; எந்நிலையிலும் அவர்களின் உணர்வுகள் சிதையாமல் காப்போம்.


உழைப்பால் வீட்டின் சுகமாய் உணரப்பட்டவர்களை இன்று உழைப்பற்ற நிலையில் சுமையென உணராமல், நேற்று அவர்களின் உழைப்பைப் பெற்று மதிப்பைக் கொடுத்த நாம்  அவர்களின் தன்மதிப்பு என்றும் குறையவில்லை என்பதை அவர்கள் உணர, அவர்களின்  உணர்வையும், அனுபவத்தையும் உயர் மதிப்பால் உயர்த்திப் பிடிப்போம். 




பெற்றோர் கொடுப்பதற்கு மட்டுமாகவே பிறந்தவர்கள் அல்ல; நாளை பெறுவதற்கும் தகுதியுடையவர்கள். எனவே, இன்று பெற்றதை நாளை பல மடங்கு கொடுக்க கடமையும், உரிமையும் பிள்ளைகளுக்கும் இருக்கிறது என்பதை ஒவ்வொரு நிலையிலும் உணர்வோம்.‌ நல் உறவாய் இணைந்தே அவ்வுறவினில் மகிழ்வோம்.


சில இல்லங்களில் பிள்ளைகளைப் பராமரிக்கிறேன் என்ற பெயரில் பெற்றோர்கள் புறக்கணிக்கப்படுவதும், பிள்ளைகளின் உழைப்பைக் கொண்டாடும் சிலர் பெற்றோர்களின் தியாகத்தை மறந்து விடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலை கடந்து பிள்ளைகளின் ஒவ்வொரு நிலை வளர்ச்சியும் பெற்றோர்களின் தன்னிகரில்லா தியாகத்தால் விளைந்தது என்பதை உணரவும், உணர்த்தவும் மறவாதீர்கள்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)