சிந்தனைச் சிதறல்.. முன்மதியையும் தற்காப்பையும் உமதாக்குவதில் உறுதியாய் இருங்கள்

Su.tha Arivalagan
Aug 05, 2026,03:39 PM IST

- அ.தாமஸ்


பண்புகளில் தலையாயது தலைமைப் பண்பு, அறிந்த ஒன்றை அறியாதவருக்கு அடையாளப்படுத்தி வழிகாட்டுங்கள். அறியாத ஒன்றென்றால், அறியாத பலரும் பின்தொடரும் நிலையில், நீங்களே வழிநடத்துங்கள், அந்நிலையில் முன்மதியையும் தற்காப்பையும் உமதாக்குவதில் உறுதியாய் இருங்கள்.


அறியாத ஒன்றை விரைந்து அறிவதில் முனைப்புக் காட்டுவதோடு, அதனைத் தெளிந்து அந்நிலையில் உங்களை வளர்ப்பதோடு பிறரையும் தகுந்த விதத்தில் வளர்த்திடும் வழிவகை காணுங்கள்.


நீங்கள் நம்பிய கை உங்களை கைவிட்டாலும் உங்களின் நம்பிக்கையை கைவிடாதீர்கள். அப்பொழுதுதான் அது உங்களை நம்பியவர்களின் கரங்களைப் பற்றி வெற்றியடையச் செய்யும் அரிய வாய்ப்புகளை உங்களுக்கு அடையாளப்படுத்தும்.




நீங்கள் தோற்றுப் போவதில் மனம் தளராது அதில் கற்றுக் கொள்வதில் கவனமாய் இருந்தால் நாளைய வெற்றி உங்களையே அதன் அடையாளமாக்கும்.


இன்றைய உறவுகளின் முதன்மைத் தேவையே சரியான வழிகாட்டுதல் தான். இதற்கு அனுதாபங்களை விட அனுபவமே அவசியமாகிறது. எனவே அறிந்திடுங்கள்! தெளிந்திடுங்கள்! துணிந்திடுங்கள்.


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)