சிந்தனைச் சிதறல்: எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள்!

Su.tha Arivalagan
Aug 21, 2026,11:15 AM IST

- அ. தாமஸ்


எந்த ஒன்றையும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள். சிறுநிலை உதாசீனப்படுத்தல்களே பெருவெளியிலும் கிடைத்தற்கரிய பருப்பொருளாகவும், கருப்பொருளாகவும் மாறி நிற்கிறது.


தாயன்பையும், தாய்ப்பாலையும், தந்தையின் நேசத்தையும், உறவுகளின் பாசத்தையும், தங்கையின் பேரன்பையும் எளிதாய் கிடைக்கிறது என்பதற்காக எந்நிலையிலும் உதாசீனப்படுத்தி விடாதீர்கள். ஏனெனில் இன்று எளிதாய்க் கிடைப்பது நாளை அரிதிலும் அரிதாய் மாறியும் போகலாம்; எங்கு தேடினும் கிடைக்காத மறைபொருளாகவும் ஆகலாம்.




எந்நிலையிலும் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம். இன்று நாம் உதாசீனப்படுத்தியவர்களே நேற்று நம்மை உருவாக்கியவர்களாகவும், நாளை உருவாக்கப் போகிறவர்களாகவும் கூட இருக்கலாம். இதையெல்லாம் மறந்தேதான் நாம் நம்மை கருவாக்கியவர்களைக் கூட பல நேரங்களில் உதாசீனப்படுத்துகிறோம்.


எவ்விடத்தில் நாம் உதாசீனப்படுத்தப்பட்டோமோ, அதே இடத்தில், அதே நிலையை விட உயர் நிலையில் நம்மை உயர்த்திப் பிடிப்பதில் உறுதியாக இருங்கள். உதாசீனப்படுத்தல்களைக் கண்டு உடைந்து போகாதீர்கள்; அவைதான் நாம் உறுதியோடு உழைப்பதற்கு உரமாகவும், பலநிலை வளர்ச்சிக்கு வரமாகவும் இருக்கிறது. 


(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)