சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
- அ.தாமஸ்
உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும். எங்கிருந்தோ, நாம் முந்த உந்தும் அந்த ஒன்று, நாம் முந்த நினைக்கும் எந்த ஒன்றையும் பின்னோக்கியே நகர்த்தும். எனவே எந்த முந்துதலும் நம்மில் இருந்தே உந்தட்டும்.
உள்ளிருந்து வெளிப்படும் உந்துதல், நம் வளர்ச்சியை நாம் மகிழும் நிலையில் கொடுக்கும். வெளி உந்துதலோ, எந்நிலையிலும் வளர்ச்சியைக் கொடுத்தாலும், உயர் மகிழ்ச்சியையும் உள்ள நெகிழ்ச்சியையும் கொடுக்காது. உயர் மகிழ்ச்சியை நமதாக்கும் உந்துதல், நம் உள்ளிருந்து உதிப்பதே உத்தமம்.
சிலருக்குக் கூடப் பயன்படாமல் பெருமையாய் வாழ்வதைவிட, சிலருக்காவது பயன்பட எளிமையாய் வாழ்வதே உயர்வானது. நமது உயர்வு என்பது பிறரை உயர்த்தும் நிலையிலே உயர்வு பெறுகிறது.
வளமையிலும் வறுமையிலும் இருப்பவரிடம் வெளிப்படும் எளிமையே, அவர்களின் செல்வாக்கை பல நிலைகளில் உயர்த்தி, அவர்களின் வளமையை நினைக்கவும், வறுமையை மறக்கவும் செய்யும். எனவே, எளிமையையே நம் உயர் உடமையாய் ஏற்போம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)