சிந்தனைச் சிதறல்.. தேடல் சரியானதாக இருந்தால் தேர்வும் சரியானதாகவே இருக்கும்!
தகுதியான ஒன்று கிடைக்கவில்லை என்று எந்த ஒன்றையும் தாமதப்படுத்துவதைவிட, நம்மையே அதற்குத் தகுதிப்படுத்துவது சிறப்பிற்குரியது.
உண்ணும் உணவோ, உடுத்தும் உடையோ, உயரிய நல் உறவோ எதுவானாலும், நம் தேடல் சரியானதாக இருந்தால் நமது தேர்வும் சரியானதாகவே இருக்கும்.
கிடைக்கும் இடத்தில் கிடைப்பதைத் தேர்ந்திடாமல், கிடைக்காத இடத்தில் நாம் நினைப்பதைத் தேடுவதில்தான் பல நிலைகளில் சுணக்கமும் சோர்வும் ஏற்படுகிறது. எனவே, சரியானதைச் சரியான இடத்தில் தேடுவோம்; நாமும் அதற்குத் தகுதியானவர்களாக மாறுவோம்.
கற்ற கல்விக்குத் தகுதியான வேலை கிடைக்கவில்லையே என்று அங்கலாய்ப்பதைவிட, கிடைக்கும் வேலையை நம் கற்ற கல்வியின் நுட்பத்தால் தகுதியாகவும் தரமாகவும் செயல்படுத்தும்போது, நம்மால் பணியும், பணியால் நாமும் உயர்மதிப்புப் பெறுவோம்.
(அ.தாமஸ் MSc, Bed, MPhil, MSc(psycho), Fscp(psycho), ஆசிரியர், வாணி கிராமம், சிவகங்கை மாவட்டம்)