இதன் பெயர்தான் நேர்மை...!
- அ.வென்சி ராஜ்
மேரி... அவள் பணிபுரியும் நிறுவனத்தில் முக்கியமான பொறுப்பு வகிப்பவள். வீட்டிலும் சரி பணி செய்யும் இடத்திலும் சரி இவளது பணி மிகச் சிறப்பானதாக இருக்கும்.
வழக்கம் போல அன்றும் காலையில் எழுந்தவுடன் வீட்டு வேலைகள் அனைத்தும் முடித்து, உணவு தயாரித்து எல்லோரையும் கிளப்பி அனுப்பி விட்டு தானும் பணி செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தாள்.
அன்று ஏனோ அவளுக்கு கொஞ்சம் சோர்வாக இருந்தது. இருந்தாலும் அவள் என்றுமே தன் கடமையில் தவறியதில்லை. தவற விரும்புவதுமில்லை. மேலதிகாரி கொடுத்த அத்தனை வேலைகளையும் செய்து முடித்தாள். தனக்கே உரிய கடமைகளையும் செய்தாள். அத்தோடு தன் அருகில் இருக்கக்கூடிய உடன் பணியாளர்களுக்கும் உதவிகள் தேவைப்பட்ட பொழுது அவள் செய்யத் தவறவில்லை.
அன்று மாலை 3 மணி இருக்கும். சிற்றுண்டி அருந்தும் அறையில் மேரி மட்டும் தனியாக அமர்ந்திருந்தாள். ஏசி ஓடிக் கொண்டிருந்தது. நல்ல மிதமான குளிர். அவளுக்கு இருந்த அசதிக்கு அப்படியே தூங்கி விடலாம் போல தோன்றியது. பலமுறை பல பேர் பணி நேரங்களில் மேல் அதிகாரிக்கு தெரியாமல் அந்த அறையில் சற்று ஓய்வு எடுத்து இவளே பார்த்திருக்கிறாள். காரணம் அந்த அறையில் கண்காணிப்பு கேமராக்கள் கிடையாது. இருந்தாலும் இவளதும் மனம் அந்த செய்கைக்கு இடம் தரவில்லை.
அங்கும் அமர்ந்து கையில் கொண்டு சென்றிருந்த பணிகளை மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
சாதாரணமாகவே அந்த அறைக்குள் யாரும் அமர்ந்து அவர்கள் ஓய்வு தான் எடுப்பார்கள் என்பது எழுதப்படாத விதியாக இருந்தது. எனவே இவளும் ஓய்வு தான் எடுக்கிறாளோ என உடன் பணியாளர்கள் சொல்லி சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அப்பொழுது மேரி வெளியே வந்ததும் அவளுடைய தோழி ஒருத்தி, "என்ன மேரி ... ஓய்வெடுத்தாயிற்றா? " என்று கேலியும் கிண்டலுமாக கேட்டார். உடனே மேரி "பணி செய்யும் நேரத்தில் ஓய்வு எடுக்கும் பழக்கம் எனக்கு இல்லை" என்று கூறினாள். உடனே அவள் "நம்பிவிட்டோம், நம்பி விட்டோம்" எனக்கூறிச் சென்றாள். அது மேரிக்கு சற்று வலித்தது. இருந்தாலும் தான் செய்யாத தவறுக்கான எந்த வார்த்தையையும் அவள் காதில் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அதற்கு பதில் கொடுத்தால் தானே அது என்னுடையது என்ற மனப்பான்மையில் சிரித்துக்கொண்டே நகர்ந்து சென்றாள்.
அப்பொழுது அங்கு நின்று கொண்டிருந்த மேலதிகாரி மேரியின் தோழியை அழைத்து, "நீ சென்று மேரியிடம் மன்னிப்பு கேள்" என்று கூறினார். அவள் ஏன் என்பது போல அவரைப் பார்த்தாள்.
உடனே மேலதிகாரி "மேரி தூங்கவில்லை. அவள் உள்ளே சென்றும் அவளது பணிகளை மட்டுமே செய்து வந்தாள்" என்று கூறினார். உடனே இந்த தோழி "சார்... அது எப்படி உங்களுக்குத் தெரியும்?" எனக் கேட்டாள். அதற்கு அந்த மேலதிகாரி மேரி அந்த அறையில் இருந்து சில பணிகளை முடித்து உடனுக்குடன் எனக்கு மெசேஜ் வாயிலாக அனுப்பி கொண்டிருந்தாள். அதனால் தான் கூறுகிறேன் அவர் தூங்கவில்லை என்று..." எனக் கூறியதும் மேரியின் தோழிக்கு சற்று வெட்கமாக போனது. உடனே சென்று மேரியிடம் மன்னிப்பு கேட்டாள். அதற்கும் மேரி புன்னகையை மட்டுமே பதிலாக தந்தாள்.
அதாகப்பட்டது நேர்மை என்பது யாதெனில் எல்லோரும் இருக்கும் பொழுது சரியாக நடந்து கொள்வது மட்டும் அல்ல... யாருமே இல்லாத பொழுதும் கூட அதேபோல சரியாக நடந்து கொள்வது தான்...
(அ. வென்சி ராஜ்... திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பட்டுடையானிருப்பு, அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)