விண் மகளே... பூமித்தாய் நனைந்திடவே பூலோகம் வந்தாயோ...!
- அ. வென்சி ராஜ்
விண் மகளே...
பூமித்தாய் நனைந்திடவே பூலோகம் வந்தாயோ...
ஆடிப்பெருக்கில் நீரில்லா ஆறுகளை நனைத்திடவே வந்தாயோ...
வரண்டிருக்கும் வயல்களையே ஈரம் ஆக்க வந்தாயோ...
சுருண்டு படுத்த உழவனுக்கு சோறு கொடுக்க வந்தாயோ...
காய்ந்திருந்த செடி கொடிகளை பசுமையாக்க வந்தாயோ...
உனக்காய் காத்திருந்த உழவனுக்கு பசுமைக் கதை சொல்ல வந்தாயோ..
இறைவன் அவன் எங்களுக்கு தந்திட்ட கொடை நீயோ...
எது எப்படியோ...
வந்தது தான் வந்து விட்டாய்...
ஓடையிலே நீர் தேங்கி ஓடும் அளவுக்கு...
பெய்து விட்டு தான் போய் வாயேன்....
அப்படி ஒரு ஆசை இல்லை என நினைத்ததோடு ஓட நினைத்தால்...
உத்தரவு தர ஒருவருமே தயார் இல்லை உணர்ந்திடு நீ...
நீ கத்தினாலும் மகிழ்ந்திடுவோம்...
கொட்டினாலும் மிளிர்ந்திடுவோம்...
திட்டினாலும் துளிர்த்திடுவோம்..
மௌனம் மட்டும் காத்திடாதே..
மனம் நொந்து தான் போயிடுவோம்..
மழை மகளே..
விண்ணில் இருந்து மண் வந்து என்னை வாழ்வாங்கு வாழ வையேன்
(அ. வென்சி ராஜ்... திருவாரூர் பகுதியைச் சேர்ந்தவர். பட்டுடையானிருப்பு, அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். பட்டிமன்ற பேச்சாளராகவும், தன்னம்பிக்கை பேச்சாளராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் அறியப்படுகிறார். திருவாரூர் தமிழ்ச்சங்கம், தமிழ்நாடு புலவர் பேரவை, இந்தியன் ரெட் கிராஸ் ஆகியவற்றில் வாழ்நாள் உறுப்பினராக உள்ளார். செஞ்சிலுவை சங்கத்தில் கொரடாச்சேரி இணை கண்வீனியராகவும், திருவாரூர் இன்னர்வீல் சங்கத்தில் உறுப்பினராகவும், ஹெல்ப் லைன் டிரஸ்ட் என்னும் ரத்ததான அமைப்பில் தலைமை ஆலோசகராகவும் பயணம் செய்கிறார்)