காமம் தேடும் கயவர்களே
- டிலாணி ஸ்ரீதரன்
மூர்க்கத்தனமான ஆசைகளையே
அள்ளிப் பருகிய அறிவில்லாத அற்பர்களின்
ஆசையின் தாக்கமா?
பச்சிளம் பருவ மொட்டுக்களையும்
பழுத்த கிழவிகளையும்
கருவறுக்கும்
மூடர் கூட்டமா?
நாடி நரம்பெல்லாம் நயவஞ்சகத்தில் ஊறிய ஆண் சமூகத்தின் தரங்கெட்ட கேவலமா?
தாய் தாரம் தங்கையென
பெண் உறவுகளின்
புனிதம் அறியாத
ஈனப் பிறவியா?
துறவறம் பூண்டு
மத நல்லிணக்கப் போர்வையைப்
போர்த்திய மனித குலத்திலே
சேர்க்க முடியாத இழிவா?
பூவையர்களைக் கருவறுக்க வந்த அருவருப்பான மருந்தில்லாத அரிய நோயா?
குருதியும் உதிரும் வண்ணம் குதறும் உயிரினமே அல்லாத குணமா?
குரல்வளையை நெறித்துக் கழுத்தைக் கொய்யும் குணம் கெட்ட அரக்கர்களின் மதிகெட்டச் செயலா?
எட்டயபுரத்தானின் ஏவலை உலகத்தின் காவலை உயிர் சுமக்கும் தெய்வங்களை மாசுபடுத்தும் துர்நாற்றமா?
கயவனாய் கண் பார்வையில் அங்கத்தை அளவெடுத்துப் பங்கத்தை உருவாக்கும் பச்சோந்தியின் குலமா?
பொத்தி வளர்த்த பெற்றவர்களின் மனநிலை உணராத உத்தமனாய் நடிக்கும் உணர்வற்ற உருவங்களா?
பெண்ணின் பெருமைதனை
தன் குடும்பத்தில்
மட்டும் உணர்ந்து நடக்கும் பிற்போக்கு சிந்தனையாளனா?
பூப்போன்ற பெண்மையை வேறூன்றும் முன்னே வேரறுத்துப் புசிக்கும் மயானப் பிசாசா?
வயிற்றுப் பசிக்கு விலங்குகளை வேட்டையாடி
உடல் பசிக்கு மழலைகளையும் ருசிக்கும் இரத்த வெறியர்களா?
ஆடை விலகலில்
விழியின் வழியில்
காமம் தேடும்
தறிகெட்டக் கயவனே!
மண்ணாசையும் பெண்ணாசையும்
பேராசையாய்க் கொண்ட
மாதவத்தின் மகத்துவம் அறியாத மடையனே!
தாய்மை தாமதமாகி மலடியென்ற
பட்டத்தை
சூடிக்கொள்ளும்
மங்கையரிடம் கேள் தாய்மையின் உணர்வை!
தாய்ப்பால் தாங்கும் மார்பின் எரிவை
தாங்கிப் பார்
புரியும் வேதனை!
மாதம் தவறாமல் வரும் மாதவிடாயின் வலியை உணர்ந்து பார் புரியும்
அணங்குகளின் அகக்குமுறல்!
வீரமான ஆணென்பது
மஞ்சத்தில் காட்டும் உச்சத்தில் இல்லை
மார்போடு அணைத்துப் பாதுகாப்பதில் இருக்கின்றது!!!
மலரும் மலர்களின் வாசத்தை அடியோடு பிடுங்கிச் சமூகத்தை
அழிக்கும் அயோக்கியர்களே,
உங்கள் ஆண்குறியை அறுத்தே
எறிந்தாலும் கேவலமான
எண்ணங்கள் உயிருடன்
எழுந்து வரக்கூடும் தீயவர்களே,
கல்வியகத்தில் கலவியை
பாடமாகக் கற்றுத் தந்தாலும் திருந்தாது தலைமுறைகளை
அழிக்கும் எண்ணம் கொண்டவர்களே ,
அறிவற்ற செயலைச் செய்யும் முன் சற்றே சிந்தியுங்கள்
சரீரம் என்பது உயிரின் உருவாக்கம் என்பதை....
மனதால் திருந்தி
மாதர்களை மதித்து
நடக்கும் வரை
மாந்தர் இனத்தில்
நீ கீழ்மகனடா,
குடிமகனாக குணங்களும்
குமூக பாதுகாப்பையும்
தந்து பாவைகளையும்
சிறகடித்து பறக்க விடு,
பெட்டைகளாகப் பிறந்ததை
தவிர வேறொரு பாவமும்
அறியாதத் தேவதைகளை
உன் வக்ர புத்தியால்
சீரழிக்காதே,
வையகம் போற்றும்
பெண்மையை நீ போற்றா விட்டாலும் தகாத தீண்டலில் தரத்தைக்
கொச்சைப் படுத்தாதே,
நிம்மதியாகக் கொஞ்சம்
வாழ்ந்து விட்டு போகட்டும்.
(டிலாணி ஸ்ரீதரன், இலங்கையைச் சேர்ந்த கவிஞர்)