நிழலாக நீயும் நிசமாக நானும்!

Su.tha Arivalagan
Aug 03, 2026,10:05 AM IST

- பாவலர் மாயோன் மங்கை


காவிரியின் 

கரையோரம்

கண்களிலே

காதலதைச்

சொன்னதும்


வைகறைப்

பொழுதினிலே

வாசலிலே

நேசமாகப்

பார்த்ததும்


திருவிழாக்

கூட்டத்திலே

இருவருமாகப்

பேசிப்பேசிச்

சிரித்ததும்


கைகளால்

சிறையிட்டு

கன்னத்தில்

முத்த மழை

சிந்தியதும்




மழையில்

செடியடியே

கிளையாட்டி

நனையவே

செய்ததும்


கோவிலிலே

காதலுக்காய்

காத்திருந்து

கண்டதுமே

கனிந்ததும்


பரிசாக

தாவணியைத்

தந்ததுமே

அழகாக

அணிவித்ததும்



செல்லுமிடம்

சிலையாகவும்

நிற்குமிடம்

நிழலாகவும்

நினைவானவனே


நிசமாக

நெஞ்சிலே

சுமந்திருந்த

நாட்களை

எண்ணுகிறேன்


அலையிலே

மிதக்கும்

துறும்பாக

ஆடுகிறேன்

அழுகிறேன்


பிரியாத

பிரியங்களைப்

பிரித்தெடுத்து

பித்தாக்கிய

பிரியமானவனே


உண்மைக்கு

உறுதியான

உள்ளத்தை

வெள்ளத்தில்

விட்டதேனடா