அதிமுக கூட்டணியில் பாஜக-27, அமமுக-11, பாமக -18 தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: அதிமுக தலைமையிலான தமிழக என்டிஏ கூட்டணியில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு குறித்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு, எந்த கட்சிக்கு எத்தனை சீட்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை முதல் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனையில், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தையானது மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்றதாகவும், கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் கௌரவமான முறையில் தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதே அதிமுகவின் இலக்கு என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாருக்கு எத்தனை சீட் :
அதிமுக கூட்டணியில் பாஜக.,விற்கு மொத்தம் 45 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் உள்ஒதுக்கீடாக அமமுக.,விற்கு 11 சீட்களை பாஜக ஒதுக்கி உள்ளது. இதன் காரணமாக தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக 27 இடங்களிலும், அமமுக 11 இடங்களிலும், பாமக 18 இடங்களிலும் போட்டியிடும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மீதமுள்ள கட்சிகளுக்கான தொகுதிகள் இன்று இரவுக்குள் முடிவு செய்து, அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனைக்கு பிறகு கூட்டணி கட்சி தலைவர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
"210 இடங்களில் வெற்றி நிச்சயம்" - இபிஎஸ் சூளுரை
செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், "எங்களுடைய கூட்டணி ஒரு 'வெற்றிக் கூட்டணி'. வரும் சட்டமன்றத் தேர்தலில் எங்களது கூட்டணி நிச்சயம் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியை மீண்டும் அமைக்கும். திமுக தலைவரும் அவரது கூட்டணிக் கட்சிகளும் எங்களைப் பற்றித் திட்டமிட்டு அவதூறுகளைப் பரப்பி வருகின்றனர். குறிப்பாக, நாங்கள் டெல்லி சென்றால் முதல்வர் ஸ்டாலின் வேண்டுமென்றே பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்கிறார். இதையெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்." எங்களின் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளத் தான் டில்லி சென்றோம். நாங்கள் டில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலினுக்கு பயம் வந்து விடுகிறது" என்றார்.
இன்று இரவு முழுமையான பட்டியல்?
கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்துப் பேசிய எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு மிகவும் சுமுகமாக நடைபெற்றுள்ளது. இன்று இரவுக்குள் மீதமுள்ள அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, முழுமையான விவரங்கள் வெளியிடப்படும்," என்று உறுதி அளித்துள்ளார். திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. விசிக, சிபிஎம் போன்ற கட்சிகள் 6 சீட்களை கூட பெற முடியாத நிலை உள்ளது. அவசர நிலையை காட்டி காங்கிரசை கூட்டணியில் இருக்க வைத்துள்ளார்கள் என்றார்.
நாங்கள் கேட்டது கிடைத்துள்ளது :
தொகுதி பங்கீடு அறிவிப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமமுக தலைவர் டிடிவி தினகரன், பல காலத்திற்கு பிறகு அதிமுக அலுவலகத்திற்கு வந்துள்ளேன். இங்கு ஜெயலலிதாவின் இருப்பை உணர முடிகிறது. நாங்கள் கேட்டதில் 99 சதவீதம் இடங்கள் கிடைத்துள்ளது என்றார். பிறகு பேசிய பாமக தலைவர் அன்புமணி, திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற முடிவுக்கு மக்கள் வந்து விட்டார்கள். எங்கள் கூட்டணி நிச்சயம் அமோக வெற்றி பெறும் என்றார்.