ராஜ்யசபா தேர்தல்..தேமுதிகவுக்கு சீட் இல்லை.. 2 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது அதிமுக!

Su.tha Arivalagan
Jun 01, 2025,02:39 PM IST

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் தேமுதிகவுக்கு சீட் தரப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், சீட் தராமல் இரு இடங்களுக்கும் அதிமுக தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.


அதேசமயம், தேமுதிகவுக்கு 2026 மாநிலங்களவைத் தேர்தலின்போது சீட் தரப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளது. தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் தரப்படும் என்று முதல் முறையாக அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


அதிமுக கூட்டணியில் கடந்த லோக்சபா தேர்தலில் தேமுதிக மட்டுமே பிரதானமான கட்சியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது காலியாக உள்ள 6 ராஜ்யசபா சீட்டுகளுக்கான தேர்தலில் தங்களுக்கு ஒரு இடத்தை அதிமுக கொடுக்கும். அது அவர்களது கடமை என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி வந்தார்.




ஆனால் அதிமுக தரப்பில் எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் மாவட்டச் செயலாளர்களுடன் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 2 நாட்கள் ஆலோசனை நடத்தினார். அப்போது தேமுதிகவுக்கான ராஜ்யசபா சீட் விவகாரம் தொடர்பாகவும் கூட ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் கட்சி முன்னணியினருடனும் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசித்துள்ளார். அப்போது அனைவருமே ஒரு மனதாக தேமுதிகவுக்கு இப்போது சீட் தர வேண்டாம் என்று கூறி விட்டதாக தெரிகிறது.


ஏற்கனவே கூட்டணிக் கட்சிகளுக்காக நாம் நிறைய இழந்துள்ளோம். ஜி.கே.வாசனுக்கு சீட் தந்தோம். அவரை நம்மை கண்டு கொள்ளவே இல்லை. கடந்த தேர்தலில் பாஜக பக்கம் போய் விட்டார். பாமகவுக்கும் சீட் தந்தோம். அன்புமணி எம்.பி. ஆனார். ஆனால் அவரோ கடைசி நேரத்தில் நமது கழுத்தறுத்து விட்டு பாஜக பக்கம் போய் விட்டார். இப்போது தேமுதிகவுக்கும் அதேபோல கொடுத்தால், அவர்களும் அணி மாற மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று எடப்பாடி பழனிச்சாமிக்கு மூத்த தலைவர்கள் கூறியதாக தெரிகிறது.


இதையடுத்து தேமுதிக பொருளாளர் சுதீஷை நேரில் அழைத்த எடப்பாடி பழனிச்சாமி, 2026 சட்டசபைத் தேர்தல் முடியட்டும். அதன் பிறகு வரும் மாநிலங்களவைத் தேர்தலில் உங்களுக்கு சீட்  தருகிறோம். இப்போது வாய்ப்பில்லை என்று கூறி விட்டாராம். இதனால்தான் சுதீஷ் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.


இந்த நிலையில் இன்று அதிகாரப்பூர்மாக தனது வேட்பாளர்களை அதிமுக அறிவித்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறுகையில், மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ இன்பதுரையும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக அவைத் தலைவர் வழக்கறிஞர் தனபால் ஆகியோர் போட்டியிடுவார்கள்.


தேமுதிகவுக்கு 2026 மாநிலங்களவைத் தேர்தலில் ஒரு சீட் வங்கப்படும். 2026 சட்டசபைத் தேர்தலில் தேமுதிக கூட்டணியில் தொடரும்  என்று அறிவித்தார்.