அதிமுக.,வில் திக்...திக்...இபிஎஸ்.,க்கு 80 பேர் ஆதரவு...அடுத்து என்ன நடக்கும்?
சென்னை : அதிமுக.,வில் அடுத்து என்ன நடக்கும் என்ற எண்ணம் கட்சி தொண்டர்களிடம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல் களமும் எதிர்பார்த்து கவனித்துகு் கொண்டிருக்கிறது. இந்நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு 80 மாவட்ட செயலாளர்கள் ஆதரவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழக சட்டசபை தேர்தலில் பெற்ற தோல்விக்கு பிறகு அதிமுக.,வில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி-சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது. சட்டமன்றக் குழு தலைவர், கொறடா என்று ஆரம்பித்து அனைத்து கட்சி விவகாரங்களிலும் இரு அணிகள் இடையே கடுமையான மோதல் நடந்து வருகிறது.
இதற்கிடையில் சட்டசபையில் தவெக அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது, அவர்களுக்கு ஆதரவாக ஓட்டளித்தவர்கள் அனைவரின் கட்சி பதவிகளையும் பறித்து உத்தரவிட்டார், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி.
மிகுந்த பரபரப்பான சூழலில் அதிமுக மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று நடைபெற்றது. சுமார் 3 மணி நேரம் மாவட்ட செயலாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் இபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் 80 பேர் கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது.
தங்களிடம் தான் அதிக எண்ணிக்கையிலான மாவட்ட செயலாளர்கள் இருப்பதாக ெஸ்.பி.வேலுமணி தரப்பு சொல்லி வந்த நிலையில் இபிஎஸ்.,க்கு ஆதரவாக 80 மாவட்ட செயலாளர்கள் இருப்பதாக சொல்லப்படுவது கட்சியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மாவட்ட செயலாளர்கள் உடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பதவிக்காக சிலர் கட்சிக்கு துரோகம் செய்துள்ளனர். தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். இக்கட்டான சூழலில் நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். கட்சியின் ஒற்றுமை தான் முக்கியம் என பேசி உள்ளார்.இதனால் அதிமுக.,வில் அடுத்து என்ன நடக்கும்? கட்சி யாருக்கு? யாருடைய கை ஓங்க போகிறது? என்ற குழப்பமும், கேள்விகளும் எழுந்துள்ளது.