கூட்டணியை வலுவாக்க அதிமுக தீவிரம்.. கட்சிகளுடன் சூடுபிடிக்கும் ரகசியப் பேச்சுக்கள்

Su.tha Arivalagan
Nov 20, 2025,12:25 PM IST

சென்னை:  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி  பழனிச்சாமியின் பிரச்சாரம் மீண்டும் தொடங்கவிருக்கும் நிலையில், மறுபக்கம் கூட்டணியை வலுவாக்கும் முயற்சியையும் அதிமுக தீவிரப்படுத்தியுள்ளதாம். குறிப்பாக அதிமுக, பாமக இடையே, கூட்டணி பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளதாக சொல்கிறார்கள்.


சமீபத்தில் மருத்துவமனையில் எடப்பாடி பழனிச்சாமி,  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை, சந்தித்தபோது அடுத்த முதலமைச்சராக உங்களைக் காண விரும்புவதாகத் தெரிவித்தார். இதை அதிமுக தலைவர்கள், சாதகமான பேச்சாகப் பார்க்கிறார்களாம்.  பாமக நிர்வாகிகள் தரப்பிலும், இரு கட்சிகளுக்கும் இடையே நடக்கும் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகள் நன்றாக முன்னேறி வருவதாக சொல்கிறார்கள். 


அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில், ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையிலான கருத்து வேறுபாடு பாமகவின் உள்விவகாரம் என்றும், வரவிருக்கும் அரசியல் போட்டியில் இருவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக நிற்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.




அதேபோல பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள தமாகா தலைவர் ஜி.கே.வாசனும் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்துப் பேசியுள்ளார். செங்கோட்டையன் விவகாரம் தொடர்பாக அவர் பேசியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாமகவைப் போலவே, இன்னும் தேமுதிகவின் நிலைப்பாடு தெளிவாக இல்லை.  அந்தக் கட்சி கடலூர் மாநாட்டுக்குப் பிறகுதான் நிலைப்பாட்டை அறிவிக்கப் போவதாக கூறியுள்ளது. 


தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கட்டமைப்பு இன்னும் வலுவாகவில்லை. இப்போதைக்கு பெரிய கட்சியாக பாஜகவும், அதிமுகவும் மட்டுமே உள்ளன. மற்றவை சிறிய கட்சிகளே. தேமுதிக, பாமக போன்றவை வந்தால்தான் கூட்டணிக்கு ஒரு உருவம் கிடைக்கும். 


மறுபக்கம் விஜய்யின் தவெகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா என்ற பேச்சுக்களும் கிளப்பி விடப்பட்டு வருகின்றன. அதுவும் குழப்பமாகவே உள்ளது.