பொங்கலுக்குப் பின் விஜய்யிடம் விசாரணை...ஜன.,19ல் மீண்டும் அழைக்கப்பட வாய்ப்பு

Su.tha Arivalagan
Jan 13, 2026,01:55 PM IST

சென்னை: கரூர் சம்பவம் வழக்கு தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், பொங்கல் பண்டிகை முடிந்து வரும் ஜனவரி 19-ம் தேதி மீண்டும் சிபிஐ (CBI) விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


டெல்லியில் 7 மணி நேர விசாரணை :




கரூரில் தவெக.,வின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரமான சம்பவம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ விசாரித்து வந்தனர். இதன் ஒரு பகுதியாக, நேற்று டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் வைத்து விஜய்யிடம் முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. காலை முதல் மாலை வரை சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக இந்த விசாரணை நீடித்ததாகக் கூறப்படுகிறது. விபத்து நடந்த சூழல் மற்றும் அது தொடர்பான பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் அவரிடம் கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.


சென்னை திரும்பினார் விஜய் :


விஜய்யிடம் நேற்று விசாரணை முடிந்த நிலையில், இன்றும் அவர் விசாரிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் விஜய் தரப்பு அவகாசம் கேட்டதால், அவரிடம் நடத்தப்பட இருந்த அடுத்த கட்ட விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. டெல்லியில் விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நடிகர் விஜய் இன்று அதிகாலை தனி விமானம் மூலம் சென்னைக்குப் புறப்பட்டார். சென்னை திரும்பிய அவருக்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போதைய நிலையில் முதற்கட்ட விசாரணை மட்டுமே முடிந்துள்ளதாகவும், இன்னும் சில விளக்கங்கள் தேவைப்படுவதாகவும் சிபிஐ தரப்பு கருதுகிறது.


அடுத்தகட்ட நடவடிக்கை :


தற்போது பொங்கல் பண்டிகை காலம் என்பதால், பண்டிகை விடுமுறைக்குப் பிறகு விசாரணையைத் தீவிரப்படுத்த சிபிஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 19-ம் தேதி மீண்டும் ஆஜராகுமாறு அவருக்கு சம்மன் அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 41 உயிர்கள் பலியான இந்த வழக்கில், ஏற்கனவே பல முக்கியப் புள்ளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ள நிலையில், நடிகர் விஜயிடம் நடத்தப்படும் இந்தத் தொடர் விசாரணை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.