Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?
சென்னை: இந்த ஆண்டு அட்சய திருதியை, ஏப்ரல் 19-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு மேல் தொடங்குகிறது. திங்கட்கிழமை மதியம் 2:00 மணி வரை திருதியைத் திதி இருப்பதாகப் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாகத் திருதியை என்பது அமாவாசையிலிருந்து வரும் மூன்றாவது நாள். சித்திரை மாத வளர்பிறையில் (சுக்ல பட்சம்) வரும் இந்தத் திருதியை நாளையே நாம் 'அட்சய திருதியை' எனக் கொண்டாடுகிறோம். திங்கட்கிழமை மதியம் வரை திதி இருப்பதால், அன்றைய தினமே வழிபாட்டிற்கு உகந்தது.
‘அட்சயம்’ என்றால் பெருகக்கூடியது, குறையாதது என்று பொருள். சூரிய பகவான் பஞ்சபாண்டவர்களுக்கு அட்சய பாத்திரத்தை வழங்கிய நாள் இது. இதில் எடுக்க எடுக்க உணவு குறையாமல் வளர்ந்துகொண்டே இருக்கும்.
தன் நண்பன் கிருஷ்ணர் மீது கொண்ட பக்தியால் ஒரு கைப்பிடி அவலைச் சமர்ப்பித்த குசேலருக்கு, கிருஷ்ண பரமாத்மா சகல செல்வங்களையும் அள்ளி வழங்கிய நாள் இது.
வறுமையில் வாடிய ஒரு பெண்மணி, தன்னிடம் இருந்த ஒரே ஒரு காய்ந்த நெல்லிக்கனியை ஆதிசங்கரருக்குப் பிட்சையாக வழங்கினார். அவரது தாராள குணத்தைக் கண்டு நெகிழ்ந்த ஆதிசங்கரர், ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ பாடி மகாலட்சுமியை வேண்ட, அந்தப் பெண்மணியின் வீட்டில் தங்க நெல்லிக்கனிகள் மழையாகப் பொழிந்தன.
அன்னை மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றியதும் இந்தத் திருநாளில்தான் என்று சொல்லப்படுகிறது.
நாளை (திங்கட்கிழமை) காலை வழிபட நினைப்பவர்கள் ராகு காலம் (காலை 7:30 - 9:00) மற்றும் எமகண்டம் (காலை 10:30 - 12:00) ஆகிய நேரங்களைத் தவிர்த்து வழிபடலாம். காலை 6:00 - 7:30 அல்லது 9:00 - 10:30 போன்ற நேரங்கள் உகந்தவை. காலையில் இயலாதவர்கள் இன்று மாலை 6:00 மணிக்கு மேல் மகாலட்சுமி படத்தை அலங்கரித்து வழிபடத் தொடங்கலாம்.
மகாலட்சுமிக்கு உகந்த பால் பாயாசம், தயிர் சாதம் மற்றும் பானகம் ஆகியவற்றை நிவேதனமாகப் படைக்கலாம். மல்லிகை மற்றும் முல்லை மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு.
தங்கம் மட்டுமா? வேறு என்ன வாங்கலாம்?
அட்சய திருதியை என்றாலே தங்கம் வாங்க வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கை. தங்கம் வாங்க இயலாதவர்கள் ஒரு குண்டுமணி அளவு தங்கமாவது வாங்கலாம் என்பார்கள். ஆனால், இன்றைய சூழலில் தங்கம் விலை அதிகமாக இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை. மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பின்வரும் பொருட்களை வாங்கினாலும் செல்வம் பெருகும்:
கல் உப்பு
மஞ்சள்
வெள்ளை நிறப் பொருட்கள் (பால், தயிர், சர்க்கரை)
ஏலக்காய், பச்சை கற்பூரம் மற்றும் வாசனை திரவியங்கள்.
வீட்டின் நிலை வாசலில் ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் கலந்த தீர்த்தத்தைத் தெளிப்பது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
சொர்ண தோஷம் நீங்க...
நகை இருந்தும் அணிய முடியாத சூழல், நகைகள் அடகில் இருப்பது அல்லது பணம் இருந்தும் நகை வாங்கத் தடையாக இருப்பது போன்றவற்றை 'சொர்ண தோஷம்' என்பார்கள். இந்தத் தோஷம் நீங்க அட்சய திருதியை நாளில் மகாலட்சுமியை மனமுருகி வேண்டிக்கொள்வது நல்லது.
அட்சய திருதியை நாளில் எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள். பொறாமை, கோபம் இன்றி "எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும்" என்ற நேர்மறை எண்ணத்தோடு வழிபட வேண்டும். கனகதாரா ஸ்தோத்திரம் அல்லது மகாலட்சுமி அஷ்டகம் படிப்பது கூடுதல் பலன் தரும்.
முடிந்தால் அருகில் உள்ள பெருமாள் அல்லது மகாலட்சுமி கோயிலுக்குச் சென்று வாருங்கள். இந்த நாள் உங்கள் வாழ்வில் அனைத்து செல்வங்களையும் அள்ளித் தரட்டும்.
அனைவருக்கும் இனிய அட்சய திருதியை நல்வாழ்த்துகள்!