Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!

Apr 19, 2026,10:29 AM IST

ஆதி சங்கரர் சிறு வயதில் பிரம்மச்சாரியாக இல்லங்கள் தோறும் சென்று யாசகம் பெற்று வந்தார். ஒருமுறை ஏழைப் பெண்மணி ஒருவரின் வீட்டிற்குச் சென்று "பவதி பிட்சாந்தேகி" எனக் கூறி யாசகம் கேட்டார். அந்தப் பெண்மணி மிகவும் ஏழ்மையில் இருந்தபோதிலும், தன்னிடம் இருந்த ஒரே ஒரு காய்ந்த நெல்லிக்கனியை மிகுந்த பக்தியுடன் சங்கரருக்கு தானமாக வழங்கினார். 


அந்தப் பெண்ணின் தர்ம சிந்தனையையும் ஏழ்மையையும் கண்டு மனம் உருகிய சங்கரர், அந்த வீட்டின் வறுமையை நீக்க வேண்டி மகாலட்சுமியைத் துதித்து அந்த இடத்திலேயே பாடியதே கனகதாரா ஸ்தோத்திரம்.


சங்கரரின் இந்தத் துதியால் மகிழ்ந்த மகாலட்சுமி, அந்த ஏழைப் பெண்மணியின் வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பொழிந்தாள்.. அதனால்தான் அவர் பாடிய ஸ்தோத்திரங்களுக்கு கனகதாரா ஸ்தோத்திரம் என பெயர் வந்தது. அட்சயதிருதியை நாளன்று இதைப் பாடினார் ஆதி சங்கரர்.


கனகம் என்றால் தங்கம், தாரா என்றால் மழை அல்லது பெருக்கு என்று பொருள். தங்கமே மழையாகப் பொழிந்ததால்தான் அதற்குக் கனகதாரா என்று பெயர்.


கனகதாரா ஸ்தோத்திரம் என்பது 21 பாடல்களைக் கொண்ட துதியாகும்.


ஸ்ரீ மகாலட்சுமியின் அருளைப் பெற்றுத் தரும் மிகவும் சக்திவாய்ந்த மந்திரமாகக் கருதப்படுகிறது.


இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்வதால் வறுமை நீங்கி, செல்வம், தானியம் மற்றும் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை.


கனகதாரா ஸ்தோத்திரத்தின் தமிழ் மொழிபெயர்ப்புப் பாடல்கள் (சமஸ்கிருதப் பாடல்களை தமிழில் மொழிபெயர்த்தவர் வாரஸ்ரீ).. இன்று அதை படித்து மகிழ்வோம்.




பாடல் 1:


மரகதத் தமாலமலர் மொட்டுகளை மொய்க்கின்ற பொன்னிறக் கருவண்டுபோல்

மாதவன் மார்பினில் வாசம்பு ரிந்தங்கு மெய்சிலிர்ப் பேற்றும்விழிகள்

பரவும்பல் வடிவத்தின் செல்வவள மாகிடும் திருமகளின் அழகுவிழிகள்

பரிவோடு தந்தஇரு விழிகளின் கடைநோக்கு மங்களமெ னக்கருள்கவே.


பாடல் 2:


நீலமா மலரினில் உள்சென்று வெளிவந்து உலவிடும் பெண்வண்டுபோல்

நீலமா முகில்வண்ணன் திருமுகம் காண்கின்ற ஆசையால் மேல்சுழன்று

கோலங்கண் டுஉடன் நாணமேற மீண்டும் கீழ்வந்து மேல்சென்றிடும்

குறுநகையால் அலைமகள் கண்வரிசை என்வாழ்வில் செல்வமெல் லாம்தருகவே.


பாடல் 3:


ஆனந்த மாய்ச்சற்று விழிகளை மூடிய முகுந்தனைக் காணும்விழிகள்

ஆனந்தம் தந்தபடி இமைசிறிதும் அசையாது இனிமையை வார்க்கும்விழிகள்

மன்மதச் சாயலைத் தன்னிலேற் கும்விழிகள் பள்ளிகொள் ளும்பரமனின்

மனைவியாம் திருமகளின் பாதிமூடும் விழிகள் செல்வசுகம் யாவுமருள்க.


பாடல் 4:


எந்த கடைப்பார்வை நாரணனின் கௌஸ்துப மார்பினில் வாழ்கின்றதோ

எந்த கடைப்பார்வை இந்திரனின் நீலமணிச் சரமாய் ஒளிர்கின்றதோ

எந்த கடைப்பார்வை சுந்தரத் திருமாலின் தேவைகளைத் தருகின்றதோ

அந்த கடைப்பார்வை வீசிடும் கமலமகள் மங்களமெ னக்கருள்கவே.


பாடல் 5:


நீருண்ட மேகமாய்க் காருண்டு காட்சிதரும் விஷ்ணுவின் திருமார்பினில்

நிலைகொண்டு ஒளிர்கின்ற மின்னலா கிஅகில உலகுக்கும் தாயுமாகி

பார்கவ குலத்தினில் அவதரித் துபூஜை செய்வதற் குரியதாகி

பரிமளிக் கும்வடிவம் எதுவோஅது என்னில் மங்களம் பொழியட்டுமே.


பாடல் 6:


மங்கலங் கள்யாவும் தன்னிடத் தில்கொண்ட மாயன்வை குந்தன்நெஞ்சில்

மதுகைட பர்யெனும் வலிமைமிகு அசுரரை மாய்த்தத்திரு மாலின்நெஞ்சில்

மன்மதன் சென்றமர வழிசெய்த வைஅந்த கடல்குமரித் திருவின்பார்வை

புன்சிரிப் பேந்திடும் அந்தகடை கண்பார்வை என்னையும் அருளட்டுமே.


பாடல் 7:


உலகாளும் வாய்ப்பையும் இந்திரப் பதவியையும் வேடிக்கையாய்க் கொடுக்கும்

முரணைவெற் றிக்கொண்ட விஷ்ணுவிற் குப்பெரும் ஆனந்தம் தந்துநிற்கும்

நீலோத்பல மலரின் உட்புறப் பகுதிபோல் நளினமாய்த் தோன்றிநிற்கும்

நிலமகளின் கடைநோக்கில் ஒருபாதி என்மீது கணமேனும் பொழியட்டுமே.


பாடல் 8:


மறுமைக்குத் தேவையாய் உள்ளன செயல்களைச் செய்கின்ற தகுதிஇல்லா

மனிதருக் குங்கூட எந்தகரு ணைப்பார்வை சொர்க்கத்தைத் தருகின்றதோ

அந்தகரு ணைப்பார்வை கொண்டவள் தாமரை மலர்மீது வீற்றிருக்கும்

அன்னையாம் ஸ்ரீமஹா லக்ஷ்மியின் திருநோக்கு தேவைகளை அருளட்டுமே.


பாடல் 9:


கருணையென் னும்மருள் காற்றினை நன்மைதரக் கூட்டியே வந்துநிற்கும்

திருமகளின் விழியென்னும் தயைகொண்ட நீருண்ட கரியமா வண்ணமேகம்

ஏழ்மையால் துயருற்று வாழ்கின்ற சாதகக் குஞ்சுகளாம் எங்களுக்கு

செல்வமழை பெய்துபெரும் பாவம்வறு மைநீக்கி வளமெலாம் அருளட்டுமே.


பாடல் 10:


கலைமாம கள்என்றும் கருடக்கொ டியானின் அலைமாம கள்என்றுமாய்

நிலமாளும் சாகம்ப ரிஎன்றும் பிறைசூடும் பெம்மானின் மலைமகளுமாய்

உலகத்திலே நின்று உயிர படைத் துக்காத்து முடிப்பதை விளையாட்டென

செய்பவள் மூவுலகம் ஆளும்நா ராயணனின் நாயகியே போற்றிபோற்றி.


பாடல் 11:


நல்லபல செயலுக்கு ஏற்றபடி பயன்தரும் வேதவடி வினளேபோற்றி

நளினமிகு அழகிய குணங்களின் உறைவிடமே ரதிதேவி போற்றிபோற்றி

எல்லையில் லாசக்தி எனவாகித் தாமரையில் அமரும்மலர் மகளேபோற்றி

எங்கும் விளங்கிடும் பூரணமே எழில்புருஷ உத்தமனின் துணையேபோற்றி.


பாடல் 12:


செங்கமல மலர்போன்ற சிங்கார முகங்கொண்ட திருமகளே போற்றிபோற்றி

மந்தரம லையசையும் பாற்கடல் தோன்றிய மாமகளே போற்றிபோற்றி

சந்திரத் தேவனுடன் தேவரமு தத்தினுடன் பிறந்தவளே போற்றிபோற்றி

நந்தகோ விந்தநா ராயணனின் நாயகியே நிலமகளே போற்றிபோற்றி.


பாடல் 13:


தங்கநிறத் தாமரையைச் செந்தளிர்க் கரமேந்தும் செந்திருவே போற்றிபோற்றி

தரணிமண் டலம்முழுதும் அரசாட்சி செய்கின்ற நாயகியே போற்றிபோற்றி

தேவாதி தேவர்க்கு ஆதிமுதல் தயைபுரியும் செல்வமே போற்றிபோற்றி

சார்ங்கமென் னும்வில்லை ஏந்திடும் ராமனின் இல்லறமே போற்றிபோற்றி.


பாடல் 14:


ப்ருகுமுனியின் புதல்வியாய் அவதாரம் செய்தவளே தேவியே போற்றிபோற்றி

திருமாலின் வலமார்பில் நிறைவாக உறைபவளே திருமகளே போற்றிபோற்றி

கமலமென் னும்மலரில் ஆலயம் கொண்டவளே லக்ஷ்மியே போற்றிபோற்றி

காலடிகள் மூன்றினால் உலகினை அளந்ததா மோதரனின் துணையேபோற்றி.


பாடல் 15:


ஒளிசுடரும் காந்தியும் தாமரை விழிகளும் கொண்டவளே போற்றிபோற்றி

உலகம் அனைத்தையும் இயக்கிடும் மங்கல நாயகியே போற்றிபோற்றி

அமரருடன் அனைவரும் அடிபணிந் தேதொழும் அலைமகளே போற்றிபோற்றி

நந்தகோ பன்குமரன் நந்தகோ பாலனின் நாயகியே போற்றிபோற்றி.


பாடல் 16:


செல்வங்கள் தருபவளே ஐம்புலனும் ஆனந்தம் பெற்றிடச் செய்யும்தாயே

பல்வகைப் பதவிகள் அரியாச னங்களைத் தருகின்ற கமலநயனீ

அல்லல் வினைகளைப் போக்குபவ ளேஎங்கள் அஞ்ஞானம் நீக்குபவளே

செல்வியே தொழுகிறேன் உன்னையே அன்னையே என்னையே என்றுங்காப்பாய்.


பாடல் 17:


தொழுகின்ற அடியார்க்குப் பொழுதெலாம் துணைநின்று செல்வங்கள் யாவற்றையும்

முழுதாகப் பொழிகின்ற திருநோக்கு எவருடைய கடைக்கண்ணின் கருணைநோக்கு

அந்தகரு ணைநோக்கு முரஹரியின் மனம்வாழும் திருமகளே உனதுநோக்கு

உன்னைஎன் மனதாலும் மெய்யாலும் சொல்லாலும் துதிசெய்து புகழ்கிறேன்நான்.


பாடல் 18:


பத்மமல ரில்வாழும் பத்மினி பத்மத்தைக் கையேந்தும் பதுமநிதியே

புத்தொளி வீசும்வெண் ணாடைமண மாலையுடன் ஒளிர்கின்ற செல்வச்சுடரே

பகவதிஹரி நாதனின் ப்ராணநா யகியே நெஞ்சமெல் லாம்அறிந்தோய்

ஜகம்மூவி னுக்கும்பெரும் ஐசுவரியம் தருபவளே என்னிடம் கருணைகாட்டு.


பாடல் 19:


தேவகங் கைநதியின் தெளிவான தூயநல் நீரினைப் பொற்குடத்தில்

திசைகளில் மதயானை கள்ஏந்தி நீராட்டத் திகழ்கின்ற தெய்வஅழகே

தாவுமலை கடலரசன் பெற்றபெண் ணேஉலகம் யாவிற்குமே அன்னையே

தரணிகளின் தலைவனாம் திருமாலின் மனைவியே காலைஉனைத் துதிசெய்கிறேன்.


பாடல் 20:


அரவிந்த மலர்போன்ற அழகியக் கண்ணனின் ஆனந்த காதலிநீ

ஐசுவரியம் இல்லாமல் ஏழ்மையில் உழல்வதில் முதல்வனாய் நிற்பவன்நான்

அருள்வெள்ளம் அலைமோதும் உன்கடைக் கண்களின் பார்வைக்கு ஏங்கிநிற்கும்

அடியனை உன்தயை உண்மையாய்த் தேடிடும் என்னைநீ காணவேண்டும்.


பாடல் 21:


மூன்றுவடி வங்களின் உருவமாய் நிற்பவள் மூவுலகி னிற்குந்தாயாம்

மோகன லக்ஷ்மியை மேற்சொன்னத் துதிகளால் நிதம்புகழும் மனிதர்எவரும்

சான்றோர்கள் போற்றிடும் அறிவாளி ஆகிறார் செல்வமெல் லாம்பெறுகிறார்

ஜெகமிதில் மேம்பட்ட குணமெலாம் கைவர பாக்கியம் பலபெறுகிறார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அட்சய திருதியை.. சித்திரை மாத பொன்னான நாளிது.. மூன்றாம் பிறையில் வரும் நாளிது!

news

Kanakathara Sthothram: அட்சய திருதியை.. ஸ்ரீ ஆதி சங்கரர் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் படிப்போம்!

news

அட்சய திருதியை அன்று...இதை வைத்துப் பூஜை செய்வோம்.. காலத்தின் அவசியம் இது!

news

Akshaya Tritiya 2026: அட்சய திருதியை.. எப்போது சாமி கும்பிடலாம்.. பஞ்சாங்கம் என்ன சொல்கிறது?

news

IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்

news

மகளிர் சக்தியை அவமதித்தவர்களுக்குத் தண்டனை நிச்சயம்.. பிரதமர் மோடி ஆவேச உரை!

news

எடுக்கவோ கோர்க்கவோ.. ஏட்டில் படித்ததை.. பார்த்து பார்த்து .. பரவசத்தில் புதுப் பூவாய் பூத்தேன்!

news

Priase the Husband Day: கணவரை மனசார பாராட்டுங்கள் இன்னிக்கு!

news

பூவிதா...! நான் உன்னை நேசிக்கிறேன்.. (மெல்லிய பூங்காற்று - 3)

அதிகம் பார்க்கும் செய்திகள்