நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: விரிவான விவாதம் நடத்த தயார் - மத்திய அரசு அறிவிப்பு

Jul 22, 2026,01:49 PM IST

புதுடெல்லி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நீட் (NEET) தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் குறித்தான கேள்விகள் தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் விரிவான விவாதம் நடத்த மத்திய அரசு தயார் நிலையில் இருப்பதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.


மக்களவையில் எதிர்கட்சிகள் அமளி : 

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முகமையின் (NTA) செயல்பாடுகள் குறித்து உடனடி விவாதம் நடத்த வேண்டும் என எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இன்று மக்களவை கூடியதும், இக்கோரிக்கையை முன்வைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்குச் சென்று கடும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டதுடன், அவை நடவடிக்கைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டடன.


அரசு தரப்பில் மத்திய அமைச்சர் பதில் : 




எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியைத் தொடர்ந்து, அரசு தரப்பில் விளக்கமளித்துப் பேசிய மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, மத்திய அரசு இப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், "நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் நாட்டின் லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த எந்தவொரு விவாதத்தையும் சந்திக்க மத்திய அரசு தயாராகவே உள்ளது. இது குறித்து விரிவான விவாதத்தை மக்களவையில் நடத்த அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்." என்று தெரிவித்தார்.


மாணவர்கள் மற்றும் பெற்றோர் எதிர்பார்ப்பு

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்திலும், வீதிகளிலும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில், நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக விரிவான விவாதம் நடைபெறவுள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


அரசு அனைத்து அம்சங்களையும் வெளிப்படையாக விவாதித்து, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் தகுந்த தீர்வையும், எதிர்காலத்தில் இதுபோன்ற முறைகேடுகள் நடக்காத வண்ணம் கடுமையான நடவடிக்கைகளையும் உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவரின் முதன்மை கோரிக்கையாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்