விஜய்யை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் கூட்டணி: தவெக கூட்டத்தில் தீர்மானம்

Meenakshi
Dec 11, 2025,05:40 PM IST

சென்னை: தவெக தலைவர் விஜயை முதலமைச்சர்  வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுடன் தான் கூட்டணி என பனையூரில் நடந்த தவெக மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


சென்னை பனையூரில் தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் , இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டை, நாஞ்சில் சம்பத் உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தீர்மானங்கள்:




1. ஊழல் மலிந்த திமுக ஆட்சியை அகற்றி, புதியதோர் தமிழகத்தை சிறப்புற உருவாக்க வேண்டும். அதற்காக நமது வெற்றித் தலைவர் விஜய் அவர்களை முதலமைச்சராக ஏற்றுக் கொண்டு, அவரின் தலைமை விரும்பி வருவோரை கூட்டணிக்கு அரவணைப்போம். மேலும் நமது கூட்டணி குறித்த அனைத்து இறுதி முடிவுகளையும் எடுக்க, தலைவர் அவர்களுக்கு முழு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


2. தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பு குழு அமைக்கப்படுகிறது. இந்த தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகுழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


3. இருண்டு கிடக்கும் தமிழகத்தை மீட்க, நம் தமிழக மக்களைக் காக்க, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கும் சிறப்பு குழு அமைக்கப்படுகிறது. இந்த குழுவுக்கான பல்வேறு கடமைகள் குறித்து நமது வெற்றித் தலைவர் அவர்களே முடிவெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


4. அவதூறு பரப்பும் எதிரிகளின் அறைகூவல் பொய்யுரைகளை தோலுரித்து, எதிரிகளை எதிர்கொண்டு தோற்கடிக்க, ஒரு வலிமையான பரப்புரையை முன்னெடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.