அரங்கனின் பிரியாவிடை...!
- பா.பானுமதி
பிரியமான அரங்கனே
பிரிந்து செல்வாயா
பிரியம் பொழிவேன் அரங்கா
பிணைத்துக் கொள்வாயா
விட்டு செல்வதில் விருப்பம் கொள்ளாதே
விடை கொடுப்பதில் வேகம் காட்டாதே
பெரிய பிராட்டி என்னை பிரியலாமா
கமலவல்லி நினைவால் என்னை கைவிடலாமா
பூதேவிக்காக என்னை புண்ணாக்கலாமா
ஸ்ரீதேவிக்காக என்னை சிதைக்கலாமா
துலுக்க நாச்சிக்காக என் தூக்கத்தை கெடுக்கலாமா
ஆண்டாளின் பாசுரத்திற்காக என்னை அழ விடலாமா
படி தாண்டாமல் உன் பாசத்திற்காக தவிக்கிறேன்
உன் அருகாமையில் மட்டுமே ஆனந்தத்தில் களிக்கிறேன்
வழிமேல் விழி வைத்து வரவேற்க காத்திருக்கிறேன்
வந்த உடனே இப்படி திரும்பி வருத்தப்படுத்தலாமா
ஆட்டிப் படைக்கும் அரங்கா
உன் அருகாமை வேண்டும்
பிரியா விடை கேட்காமல்
என்னை பிணையும் நிலை வேண்டும்
அரங்கா என்னையும் உன் அடியாராக ஏற்றுக்கொள்
அப்படியாவது உன் அருகாமை எனக்கு கிடைக்கட்டும்
இப்படிக்கு
ரங்கநாயகி தாயார்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)