அழகி .. ஒரு நிமிடக் கதை (11)
- பூரணவள்ளி சேகர்
தாய் தந்தையை இழந்த தேவி தன் பாட்டியின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தாள்.
கறுத்த நிறமும் அழகற்ற முகமும் ஒடிசலான உடலும் கொண்ட தேவியைப் பார்த்த அனைவரும் அவளை ஒதுக்க நினைத்தனர்.
கமலா பாட்டி மட்டும் தேவியின் மேல் மாறாத அன்பு கொண்டு இருந்தாள்.
அருகில் உள்ள பல வீடுகளில் வீட்டு வேலை பார்த்து தன் பேத்தியைப் படிக்க வைத்துக் கொண்டு காலம் கடத்தி வந்தாள் கமலா பாட்டி.
பாட்டிக்கு உடல்நலம் இல்லாத போது கமலாவிற்கு பதிலாக தேவி வீட்டு வேலைக்குச் சென்றால் கூட அவளை அனுமதிக்க மறுத்தனர்.
அவளது முகத் தோற்றம் அனைவரையும் ஒதுங்க வைத்தது. பள்ளியிலும் தேவிக்கு நல்ல தோழிகள் கிடைக்கவில்லை.
ஒரு வழியாக தன் 12 ஆம் வகுப்பை முடித்தாள் தேவி. தேர்ச்சி பெற்றாலும் மேலும் படிப்பைத் தொடர அவள் விரும்பவில்லை.
ஏதாவது வேலைக்கு சென்று பாட்டியை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என்று தேவி நினைத்தாள்.
பல இடங்களில் வேலை கேட்டும் கிடைக்கவில்லை.
கமலா பாட்டியின் முயற்சியால் அடுத்த தெருவில் உள்ள ஓட்டலில் தூய்மைப் பணிக்கு ஆள் தேவை என்று தெரிய வந்தது.
தேவியை நேரடியாகச் சென்று கேட்டு வரும் படி கூறினாள் கமலா. அதற்காக அந்த ஓட்டலுக்குச் சென்று விசாரித்துக் கொண்டிருந்தாள் தேவி.
அப்போது நவ நாகரீக உடையணிந்த ஒரு பெண் முகவரி விசாரிப்பது போல விசாரித்துவிட்டு தான் வைத்திருந்த சிறு பையை அவளருகில் வைத்து விட்டு ஏதும் அறியாதவள் போல வெளியேறினாள்.
அவள் பை வைத்ததை யாரும் கவனிக்கவில்லை. அதே நேரத்தில் காவலர் சிலர் ஓட்டலுக்குள் வந்தனர்.
மேலாளரிடம் இங்கு போதைப் பொருள் வைத்திருக்கும் ஒரு பெண் இருப்பதாகத் தகவல் கிடைத்ததாகக் கூறினர்.
தேடுதலின் போது தேவியின் காலருகில் இருந்த பை அவளைக் குற்றவாளி ஆக்கியது.
தேவி கைது செய்யப்பட்டாள்.
மறுநாள் நாளிதழ் மற்றும் சமூக வலைதளங்களில்... போதைப் பொருள் வழக்கில் அழகி கைது என்று செய்தி வெளியானது.
கடைசியில் தேவி அழகி என்று அறியப்பட்டாள்.
(ப.பூரணவள்ளி சேகர், இடைநிலை ஆசிரியர் , ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி , விரகனூர் , திருப்பரங்குன்றம் ஒன்றியம்)