மாணிக்க மகனே மரகத செல்வா.. மகனுக்கு ஓர் மடல்!

Su.tha Arivalagan
May 08, 2026,03:57 PM IST

- பா. பானுமதி


மாணிக்க மகனே மரகத செல்வா! 


காணிக்கை ஆக்குகிறேன் இம்மடலை...


அன்றொரு நாள் செவ்வாய்க்கிழமை மாலை பொழுது பனிக்குடம் உடைந்து பாவாடை நனைந்தது. பக்கத்தில் உள்ள சிறிய மருத்துவமனைக்கு எல்லாம்  சென்று பார்த்தோம். காலையில் தான் மருத்துவரை காணலாம், இரவிலே இயலாது என்றார்கள் .  இப்படியே இரவு முடிந்து பொழுது விடிந்தது 


இருப்பதிலேயே சிறந்த மருத்துவமனையில் சேர்ப்பேன் என்று என் தந்தை உன் தந்தையையும் அழைத்துக் கொண்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்த்தார்கள். 


வலி தொடர்ந்து வராமல் விட்டு விட்டு விரட்டியது வயிற்றில் தொடங்கிய வலி இடுப்பை சுற்றி வளைத்தது. முதுகில் ஏறி தண்டுவடத்தை தாக்கியது. கால் இரண்டும் துவண்டது . கத்தி கத்தி தொண்டை வறண்டது.


இடுப்பு எலும்பு உடைந்தது. இன்னும் என்னென்னவோ நடந்தது. பல எலும்புகள் ஒரே நேரத்தில் முறிந்தது போல வலி என்னை பாடாய்படுத்தியது . நாடி நரம்புகள் நடுங்கியது இதயம் எகிறி குதித்தது. ரத்தம் சூடாகி கொதித்தது. சத்தம் வராமல் சங்கடப்படுத்தியது. இப்படியே மூன்று நாள் ரணமாகி மூன்றாம் நாள் இரவில் உள்ளம் கனமாகி

வேதனையை விளக்க வார்த்தை இல்லை. சோதனையை சொல்ல முடியவில்லை. சாதனைப் போல நீ வந்து பிறந்தாய் 

என் வாழ்வின் இருள் அகற்றும் ஒளி விளக்கு நீ தான்.




பூங்கொத்து போன்ற மென்மையில் தேன் சுட்டு போன்ற தன்மையில் மாம்பழம் தோற்கும் கன்னங்களில் மாதுளை தோற்கும் இதழ்களில்   காந்தம் தோற்கும் கண்களால் ரோஜாப்பூ தோற்கும் நெற்றியில் பாற்கடல் அமுதம் போல உன்னை கொண்டு வந்து என் கைகளில் தந்தார்கள் 


வீட்டிற்கு வந்ததும் என் விழியில் உன்னை வைத்திருந்தேன். விரல் படும் போதும் விழிப்புடன் இருந்தேன். கொல்லாமை நோம்பிதிருந்த நான் உன்னை கொசு கடித்தால் கொல்லும் அரக்கியானேன். தாலாட்டி சீராட்டி நீராட்டி  பாராட்டி பாலூட்டி வளர்த்தேன்.


கஞ்சி கொடுத்து வாழ்ந்தார் என் தந்தை. சோறு கொண்டு வாழ்ந்த நான் உனக்கு வகை வகையாய் உணவுகள் 

ஆண்டிற்கு ஒரு முறை உடை என் தந்தை ஆண்டிற்கு இருமுறை உடை எனக்கு ஆண்டு முழுவதும் உடைகளால் உன்னை அலங்கரித்தேன்


இவையெல்லாம் உழைப்பால் உழைப்பின் சிறப்பால் கல்வி என்னும் மந்திரத்தால் கிடைத்த வாழ்க்கை நீ இன்னும் அதிகமாக கற்க வேண்டும் மேலும் மேலும் உழைக்க வேண்டும் அப்போதுதான் வாழ்வில் உயர முடியும் நம் தலைமுறையை உயர்த்த முடியும்.

 

உனக்கு மனமான பின்னே உன் மனைவிக்கு என்னை பிடிக்காததால் உண்டான மன வலியை நான் அறிவேன் அதனால் உன் உன்னை விட்டு உன் சுமையைக் குறைக்க இந்த ஆசிரமத்தில் வந்து சேர்ந்து விட்டேன் கவலைப்படாதே நான் காலமாகிவிட்டால் எரிப்பதா புதைப்பதா என தவித்துக் கொண்டிருக்காமல் உடல் தானம் செய்து விடு. உனக்கு வேலை மிச்சம் சடங்கு சம்பிரதாயங்கள் என்று நீ சங்கடப்பட்டு விடாதே.


இறந்து போனாலும் என் ஆன்மா உன்னை சுற்றியே இருக்கும். கவலைகள் உனக்கு வந்தால் காற்றாய் வந்து அதை கலைத்து விடுவேன் தடைகள் வந்தால் உடைத்து தவிடு பொடி ஆக்கி விடுவேன் உன் பிரச்சனைகளை பிய்த்து எறிந்து விடுவேன் .


ஆண்டுக்கு ஒரு முறை இந்த கடிதத்தை எடுத்து படித்துப் பார். அழாதே அமைதிகொள் அம்மா இருக்கிறேன். 


கடிதம் உனக்கு கிடைக்கும்போது இவ்வுலகில் அம்மா இருக்க மாட்டேன் 


இப்படிக்கு 

என்றும் உனக்காக வாழும் 

அம்மா


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)