கரூர் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணை வேண்டும்... சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு

Su.tha Arivalagan
Oct 07, 2025,01:45 PM IST

டில்லி : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக பாஜகவைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


செப்டம்பர் 27ம் தேதி தவெக சார்பில் நடத்தப்பட்ட பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு ஒரு நபர் கமிஷனை அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கிடையில் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தவெக சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனுக்களை கடந்த வாரம் விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை, "சம்பவம் நடந்து சில நாட்கள் தான் ஆகிறது. இப்போது தான் மாவட்ட போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது சிபிஐ விசாரணை கோருவதை ஏற்க முடியாது" என கூறி தவெக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்தது. இருந்தும் பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.




"விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. அவரை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? அவரது பிரச்சார வாகனத்தை ஏன் பரிமுதல் செய்யவில்லை?" என்பது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை முன் வைத்த சென்னை ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமாரின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டிற்கு செல்ல தவெக சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கரூர் விவகாரம் தொடர்பாக  சுப்ரீம் கோர்ட்டில் பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


இதை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் கோரிக்கையும் வைக்கப்பட்டது. அதைப் பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டதுடன், இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் 10ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மறுத்து மதுரை ஐகோர்ட் கிளையின் உத்தரவை எதிர்த்து இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது