துருப்பிடித்துப் போய்விட்ட திமுக ஆட்சிக்கு நேற்று நடந்த குற்றங்களே சாட்சி: நயினார் நாகேந்திரன்
சென்னை: ஒரு காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் போலியாக பெருமை பேசப்பட்ட “இரும்புக்கரம்” நான்கரை ஆண்டுகளாக ஒரு போதும் செயல்படாமல் ஒட்டுமொத்தமாக துருப்பிடித்துப் போய்விட்டது என்பதற்கு நேற்று ஒரு நாளில் நடந்த குற்றங்களே சாட்சி என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பக்க பதிவில், தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் தள பக்கத்தில், தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 4 கொலைகளும், 4 போதைப் பொருள் கடத்தல்களும், 4 பாலியல் குற்றங்களும் 1 கொலை முயற்சியும், காவல்துறை மீதான தாக்குதல் ஒன்றும் நடந்துள்ளதாக வெளிவந்துள்ள பத்திரிகைச் செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.
இது போதாததற்கு, சென்னையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்தே கொலை முயற்சி நடந்தது, போதையில் இருவர் காவலரையே தாக்கியது ஆகியவை அறிவாலயம் ஆட்சியில் தலைநகரிலேயே ஏட்டளவுக்குக்கூட சட்டம் ஒழுங்கு இல்லை என்பதைப் பட்டவர்த்தனமாக்குகிறது.
ஒரு காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் போலியாக பெருமை பேசப்பட்ட “இரும்புக்கரம்” நான்கரை ஆண்டுகளாக ஒரு போதும் செயல்படாமல் ஒட்டுமொத்தமாக துருப்பிடித்துப் போய்விட்டது என்பதற்கு நேற்று ஒரு நாளில் நடந்த குற்றங்களே சாட்சி!
துருப்பிடித்த இரும்பைக் காயலான் கடைக்குத் தூக்கிப் போடுவது போல, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக அரசை மக்களும் கண்காணா தொலைவில் தூக்கி எறியத் தான் போகிறார்கள்! சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்தும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தேர்ந்தெடுத்து, தமிழகத்தைத் தலை நிமிரச் செய்யப் போகிறார்கள்! இது உறுதி என்று தெரிவித்துள்ளார்.