சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார் நயினார் நாகேந்திரன்

Su.tha Arivalagan
Feb 12, 2026,06:31 PM IST

கோவை: தமிழகம் முழுவதும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களை பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் உள்ள சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடிகளில் பணிபுரியும் ஊழியர்கள், தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என நீண்ட நாட்களாக வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, தங்களுக்கு வழங்கப்படும் தொகுப்பூதிய முறையை ரத்து செய்துவிட்டு, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதிய முறையை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3ம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 


கோவை தெற்கு மாவட்ட தாசில்தார் அலுவலகம் அருகில் இரவும், பகலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் இரவிலும் அங்கேயே தங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை வந்தார்.




அப்போது, கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு போராடி வரும் அங்கன்வாடி ஊழியர்களை போராட்ட களத்தில் சந்தித்தார். பின்னர் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் போராட்ட பந்தலில் தரையில் அமர்ந்து அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுடன் பேசி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.


போராட்டக் களத்தில் ஊழியர்களுடன் தரையில் அமர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஏழை எளிய குழந்தைகளின் பசியைப் போக்கும் உன்னதமான பணியைச் செய்யும் சத்துணவு ஊழியர்களை, வீதியில் இறங்கிப் போராட வைப்பது வேதனைக்குரியது. கடந்த காலங்களில் தேர்தல் வாக்குறுதியாக இவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என திமுக கூறியிருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை நிறைவேற்றத் தவறிவிட்டது. இந்த பிரச்சனை குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பி உங்கள் கோரிக்கைகள் நிறைவேற பாடுபடுவோம் என அவர்களிடம் வாக்குறுதி அளித்தார்.