ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் - இது முதல் முறையா? பட்ஜெட் பாரம்பரியம் என்ன?
டில்லி : இந்திய நிதி வரலாற்றில் ஒரு முக்கிய நிகழ்வாக, 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று (பிப்ரவரி 1) ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுகிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் - இது முதல் முறையா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இல்லை, இது இந்தியாவின் முதல் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் அல்ல. இதற்கு முன்பு 27 ஆண்டுகளுக்கு முன்னால், 1999-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அப்போதைய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதன் பிறகு இப்போது தான் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது 9-வது தொடர்ச்சியான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இதன் மூலம், தொடர்ச்சியாக அதிக பட்ஜெட்களைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
ஏன் பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது?
பழைய காலனித்துவ கால நடைமுறைப்படி, பட்ஜெட் பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலை நாளில் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், 2017-ம் ஆண்டு முதல் அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்தார். பிப்ரவரி 1-ல் பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம், ஏப்ரல் 1-ல் தொடங்கும் புதிய நிதியாண்டிற்கு முன்பே அனைத்து திட்டங்களுக்கும் நாடாளுமன்ற ஒப்புதல் பெற போதுமான நேரம் கிடைக்கிறது. தொழில்துறையினர் மற்றும் மாநில அரசுகள் புதிய வரி மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை முன்கூட்டியே தயார் செய்துகொள்ள இது உதவுகிறது.
நேர மாற்றம் மற்றும் பிற மாற்றங்கள்:
1999-க்கு முன்பு மாலை 5 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. யஷ்வந்த் சின்ஹா அந்த நடைமுறையை மாற்றி காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யும் முறையைக் கொண்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளாக 'பகி-காதா' (Bahi-Khata) எனப்படும் சிவப்பு நிற உறையில் டிஜிட்டல் டேப்லெட் மூலம் பட்ஜெட் தாக்கல் செய்யும் நவீன முறை பின்பற்றப்படுகிறது.
இன்றைய பட்ஜெட்டின் முக்கியத்துவம்:
ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமாக பங்குச்சந்தைகள் விடுமுறை அளிக்கும். ஆனால், பட்ஜெட்டை முன்னிட்டு இன்று பங்குச்சந்தைகள் (NSE/BSE) சிறப்பு நேரலையில் இயங்குகின்றன. இதனால் முதலீட்டாளர்கள் பட்ஜெட் அறிவிப்புகளுக்கு உடனுக்குடன் எதிர்வினையாற்ற முடியும்.