நேபாள பேரிடருக்கு நிலநடுக்கம் அல்ல.. பனிப்பாறை சரிவே பேரழிவிற்குக் காரணம்: அமெரிக்கா

Su.tha Arivalagan
Aug 27, 2026,10:40 AM IST

காத்மாண்டு: நேபாளம் மற்றும் சீனா எல்லைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலநடுக்க உணர்வுக்கு, நிலநடுக்கம் காரணமல்ல என்றும், பனிப்பாறை சரிவு மற்றும் பாறைச் சிதைவுகளின் நகர்வே காரணம் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெளிவுபடுத்தியுள்ளது.


முன்னதாக, நேபாளம்-சீனா எல்லைக்கு அருகில் 4.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்த பிறகு, நிலநடுக்கம் எதுவும் ஏற்படவில்லை என்றும், லெண்டே ஆற்றுப் பகுதியில் பனிப்பாறை மற்றும் பாறைகள் திடீரென சரிந்து ஆற்று வெள்ளத்துடன் கலந்து அடித்து வரப்பட்டதே இதற்குக் காரணம் என்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




இந்த திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 157-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சீனா எல்லைப் பகுதியை ஒட்டிய ரசுவா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 142 இந்தியர்கள் உட்பட 341 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் காணாமல் போயுள்ளனர்.


நேபாள ராணுவம் மற்றும் காவல்துறை ஹெலிகாப்டர்கள் மூலம் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. நீர்மின் திட்ட உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததால், பாதிக்கப்பட்ட பல கிராமங்களில் மின்சாரம் இன்றி மீட்புப் பணிகள் இரவிலும் செல்போன் வெளிச்சத்தில் நடைபெற்று வருகின்றன.


பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி மீட்புப் பணிகளை விரைவுபடுத்த நேபாள பிரதமர் பாலெந்திர ஷா உத்தரவிட்டுள்ளார்.