டெல்டா மாவட்டங்களை உலுக்கிய டிட்வா புயல். கனமழையால் விவசாய நிலங்கள் கடும் பாதிப்பு
- கலைவாணி கோபால்
தஞ்சாவூர்: தமிழ்நாட்டில் டிட்வா புயல் காரணமாக ஏற்பட்ட பெரும் காற்று மற்றும் கனமழையால் பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களில்தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல ஊர்களில் வயல்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள வாழை மரங்கள் காற்றில் சாய்ந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுபோல திருவாரூர் மாவட்டத்திலும் நீரில் மூழ்கி கிட்டத்தட்ட 4000 ஏக்கர் நெல் பயிர்கள் மூழ்கி உள்ளன. இது அங்குள்ள விவசாயிகளுக்கு இது பெரும் மன பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட விளை நிலங்களுக்கு அரசு தக்க நிவாரணம் அளிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு பதில் தரும் விதமாக பேரிடர் மேலாண்மை அமைச்சர் கே கே எஸ் ராமச்சந்திரன் பதிலளிக்கையில் தமிழ்நாட்டில் மொத்தம் 56,000 ஹெக்டர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், 31% பாதிப்பு இருந்தால் மட்டுமே நிவாரணங்கள் வழங்கப்படும் . கண்டிப்பாக விவசாயிகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும் எனவும் விளக்கியுள்ளார்.
புயல் மழை ஓய்ந்த பின்னர் இதுதொடர்பாக மத்திய நிபுணர் குழு காவிரி டெல்டா பகுதிகளுக்கு வருகை தந்து பாதிப்பை நேரில் ஆய்வு செய்து நிவாரண உதவிகள் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
டிட்வா புயல் இன்னும் கூட முடியவில்லை. அது பலவீனமடைந்த நிலையிலும் கூட தமிழ்நாட்டின் வடக்கு கடலோரப் பகுதியில் தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவி வருகிறது. இதனால் தற்போது வட தமிழ்நாடு கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)