சிந்தனைத்துளிகள்.. ரகசியமான வாழ்கைப் பாதையில் மாற்றம் ஒன்றே மாறாதது!

Su.tha Arivalagan
Dec 17, 2025,10:49 AM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன்


நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லை. கைக்கு எட்டுவதெல்லாம் வாய்க்கு எட்டுவதில்லை இருப்பினும் முயற்சியை நாம் கைவிடுவதில்லை.  


நம் உழைப்பின் மீது நாம் வைக்கும் நம்பிக்கை  நாம் நினைத்ததை, நழுவிப்போனதை காலம் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும். உழைப்புக்கில்லை எல்லை உழைப்போம் உயர்வோம். 


பிறப்பு என்பது  இறப்பு என்ற முடிவை சுமந்தே பிறக்கிறது.இதற்கு இடையில் வாழும் வாழ்க்கையை சிறப்பாக நாம் அமைத்துக் கொள்ள வேண்டும். 




ஒரு செடியில் பூ மலரும்போதே அது ஒரு நாள் உதிரப்போகும் ரகசியத்தை தன்னுள் வைத்திருக்கிறது. ஆனால், உதிர்வதற்கு முன்பாக அது தரும் வாசமும் அழகும் தான் அதன் வெற்றியாகிறது.


முடிவு எப்போது வரும் என்று கவலைப்படுவதை விட, கையில் இருக்கும் இந்த நொடியைக் கொண்டாடுவதுதான் வாழ்க்கை. நாளை என்பது ஒரு கேள்விக்குறி, நேற்று என்பது ஒரு வரலாறு. இந்த நிமிடம் மட்டுமே நம் வசமிருக்கும் ஒரு பரிசு.


வாழ்க்கை என்பது வெறும் மூச்சு விடுவது மட்டுமல்ல, நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு நாம் கொடுக்கும் மகிழ்ச்சியும் அன்பும் தான். ஒரு சிறிய புன்னகை அல்லது ஒரு கனிவான சொல் ஒருவருடைய நாளை மாற்றக்கூடும். கைம்மாறு கருதாமல் உதவி செய்வது மனதிற்கு நிம்மதியைத் தரும்.


மனதை விசாலமாக்கி தான தருமங்களை பெருக்கி உதவி தேடுவோர்க்கு உதவி இனிய சொற்களை உதிர்த்து சிறிய செயல்களையும் பாராட்டி நம்மால் இயன்ற நற்செயல்களை செய்து  வாழ்க்கையை முழுமை அடையச்செய்வோம். 


ரகசியமான வாழ்கைப் பாதையில் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நாம் அறியனும், பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலே...!


(கவிஞர் ஜி.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)