Chettinadu Kitchen: அடித்துத் தாக்கும் வெயிலுக்கு..அதிரடி தேங்காய் பால் கஞ்சியும்..பருப்பு துவையலும்

Su.tha Arivalagan
Apr 24, 2026,11:18 AM IST

- மணிமா


செட்டிநாட்டு அடுப்படியின் அத்தனை ரெசிபிகளுக்கும் தாங்கள் அனைவரும் தரும் பேராதரவிற்கு உங்கள்.. மணிமா- வின் முதற்கண் நன்றி.


அடித்துத் தாக்கும் அதிக வெயிலுக்கு அதிரடி தேங்காய் பால் கஞ்சியும் அருமையான பருப்பு துவையலும்.. இதுதான் இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிப்பி.


கஞ்சிக்கு தேவையான பொருட்கள் ..




பச்சரிசி ஒரு கப்

பூண்டு பல் உரித்தது ஒரு கப்

வெந்தயம் கால் ஸ்பூன்

உப்பு கால் ஸ்பூன்

ஒரு தேங்காயில் பாதி ...


துவையலுக்கு தேவையானவை


பொட்டுக்கடலை ஒரு கப்

தேங்காய் இரண்டு விரல் நீளம்

சிவப்பு வற்றல் மிளகாய் ஒன்று

மிகச் சிறிதளவு உப்பு.


தேங்காய் பால் கஞ்சி செய்முறை


அடி கனமான குக்கரில் ஒரு லிட்டர் தண்ணீர் விடவும். பச்சரிசியை இரண்டு முறை கழுவி குக்கர் தண்ணீருக்குள் சேர்க்கவும். பூண்டு உரித்து வைத்துள்ளதை லேசாக இடித்து விட்டு உள்ளே சேர்க்கவும். அதனுடன் வெந்தயம் உப்பு சேர்க்கவும். பூண்டு இரண்டு கப் அளவு கூட சேர்த்துக் கொள்ளலாம், ஆனால் வெந்தயம் கொஞ்சம் கூடி போனாலும் கசக்கும் .. 


குக்கரை அடுப்பில் ஏற்றி மிதமான தீயில் வைத்து ஆவி வந்தவுடன் வெயிட் போட்டு மிதமான தீயில் 15 நிமிடம் 20 நிமிடம் வைத்து, தீயை அணைத்து விடவும் ஒரு பத்து நிமிட நேரம் ஆற விடவும்.


அரை மூடி தேங்காயை துருவி 100 மில்லி தண்ணீர் விட்டு பால் எடுக்கவும். பெரிய துளை உள்ள சூப் வடிகட்டியில் கொட்டி வடிகட்டவும். இப்படி எடுத்தால் பால் கெட்டியாக இருக்கும். (டீ வடிகட்டியில் பால் பிழிந்து எடுக்க வேண்டாம்)


குக்கரை திறந்து கரண்டியால் மசித்து அல்லது விஸ்க் வைத்து நன்கு கிளறி கரைத்து விடவும். பார்ப்பதற்கு பாயசம் போல் இருக்கும். இனி அடுப்பு தேவையில்லை. இதனுள் தேங்காய் பாலை சேர்த்து விடவும். தேங்காய் பால் கஞ்சி தயார்.




அடுத்து துவையலுக்கு கொடுத்துள்ள அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து 50 மில்லி தண்ணீர் விட்டு கொரகொரப்பாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பருப்புத் துவையல் தயார்.


மதியம் சாப்பாட்டிற்கு பதிலாக இரண்டு கிளாஸ் பருகலாம். சிறிது துவையலை எடுத்து நாக்கில் வைத்துக்கொண்டு ஒரு வாய் கஞ்சி பருகுங்கள்.


சுவையாக ருசியாக இருக்கும், வெயிலுக்கு சூட்டை தணிக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண் வராமல் தடுக்கும், 

வாய்ப்புண் வந்து விட்டாலும் ஒருமுறை பருகிய பின் உடனே ஆற்றிவிடும்.


அருமையான மணம் மனதுக்கு நிறைவாகவும் அருந்திய பின் வயிற்றுக்கு குளுமையாகவும் இருக்கும். அன்புடன் சமைத்து அழகாய் பரிமாறி இன்பமுடன் மகிழ்ந்து இனிமையாய் உன்பீர்..


மீண்டும் ஒரு சுவையான ரெசிபியுடன் உங்களை எல்லாம் சந்திக்கிறேன்.


உங்கள் ஆதரவோடும் உங்கள் அன்போடும் உங்கள்.. மணிமா.