கரூர் துயரம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு, வதந்திகளை பரப்ப வேண்டாம்: முதல்வர் மு.க. ஸ்டாலின்
சென்னை: கரூரில் நடந்துள்ள துயர சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு கருத்துகளை பரப்புவதை தவிர்த்து அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், கரூரில் நடந்துள்ளது பெரும் துயரம், கொடுந்துயரம். இதுவரையில் நடக்காத துயரம். இனி நடக்கக்கூடாத துயரம். மருந்துவமனைக்கு நான் நேரில் போய் பார்த்த காட்சிகள் இன்னும் என் கண்ணை விட்டு நீங்கவில்லை. கனத்த மனநிலையிலையிலும் துயரத்திலேயும் தான் என் இதயம் இன்னும் இருக்கிறது. செய்தி கிடைத்ததும் மாவட்ட நிர்வாகத்தை முடுக்கிவிட்டு எல்லா உத்தரவுகளையும் பிறப்பித்த பின்னாலும், என்னால வீட்டுல இருக்க முடியல.
உடனே அன்றைக்கு இரவே கரூருக்கு போனேன். குழந்தைகள் பெண்கள் என 41 உயிர்களை நாம இழந்து இருக்கிறோம். இறந்து போனவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் அறிவித்து, அதனை உடனடியாக வழங்கிக்கொண்டு இருக்கிறோம். மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு சார்பில் முழு சிகிச்சை வழங்கி வருகிறோம். நடந்த சம்பவங்களுக்கான முழுமையான உண்மையான காரணத்தை ஆராய முன்னாள் நீதியரசர் அருணாஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருக்கு.
ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும்னு உறுதி அளிக்கிறேன். இதற்கு இடையில் சோசியல் மீடியாவில பரப்பும் வதந்திகளையும், பொய் செய்திகளையும் பார்த்துகிட்டு தான் இருக்கேன். எந்த ஒரு அரசியல் கட்சி தலைவரும் தனது தொண்டர்களும், அப்பாவி பொதுமக்களும் இறப்பதை விரும்ப மாட்டார்கள். சோகமும், துயரமும் சூழ்ந்துள்ள இந்நிலையில், பொறுப்பற்று நிலையில், விஷமத்தனமான செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தும் போது, இனி வரும் காலங்களில் எத்தகைய பொருப்போடு நடத்துக்க வேண்டும் என்ற விதிமுறைகளை வகுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. எனவே நீதியரசன் ஆணையின் அறிக்கை கிடைத்தவுடன் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று உறுதி அளிக்கின்றேன். அத்தகைய நிதிமுறைகளுக்கு எல்லாரும் ஒத்துழைப்பு தருவாங்கனு நம்புறேன். மனித உயிர்களே எல்லாத்துக்கும் மேலானது, மானுட பற்று அனைவரும் வேண்டியது.
அரசியல் நிலைப்பாடுகள், கொள்கை முரண்பாடுகள், தனிமனித பகைகள் என்று எல்லாவற்றையும் விலக்கி வைத்துவிட்டு, எல்லாரும் மக்களுடைய நலனுக்காக சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாடு எப்பொழுதுமே நாட்டுக்கு பல வழியில் முன்னோடியாக தான் இருந்திருக்கு. இதுபோன்ற நிகழ்வுகள் இனி எந்த காலத்திலையும் நடக்காமல் தடுக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை. நன்றி.வணக்கம் என்று தெரிவித்துள்ளார்.