கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திமுக தான் : முதல்வர் முக ஸ்டாலின்!

Meenakshi
Oct 27, 2025,06:05 PM IST

சென்னை: உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கல்வி மறுக்கப்பட்டோர் இன்று உயர் பதவிகளில் இருப்பதற்கு காரணம் திராவிட இயக்கம் தான் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


சென்னையில் பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்த இடத்துக்கு செல்வதற்கு காரணம் திராவிட இயக்கம்தான். மாற்றத்தை உருவாக்கும் தலைவர்களாக மாணவர்கள் உருவாக வேண்டும்.


பட்டம் பெற்ற மாணவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள். பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் இந்திய அளவில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளது. இங்கு பயின்ற மாணவர்கள் சமுதாயத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளனர். உயர்கல்விக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி. உலகம் எந்த வேகத்தில் மாற்றமடைகிறதோ அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து நாமும் ஓட வேண்டும்.




தலைமைத்துவம் என்பது ஒருவர் ஏற்படுத்தும் தாக்கம் தான்.  அடுத்து நடக்கப் போவதை கவனிப்பவர்கள் தான் எந்த துறையிலும் நிலைத்து நிற்க முடியும். எங்கு சென்றாலும் அன்போடு, அறத்தோடு செயல்பட வேண்டும்.  சோதனையான காலத்திலும் நேர்மை, நம்பிக்கை, பொறுமையை கைவிட கூடாது.  உயர்ந்த சிந்தனை தான் வெற்றி பெற உதவும். நேர்மை தான் அறிவை அளவிட உதவும். வெற்றி பெறும் மாணவர்கள் தங்களுக்கு பின்னால் படித்து வரும் மாணவர்களை கைதூக்கி விட வேண்டும் என்று பேசினார்.