ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே.. குழந்தைப் பருவ நினைவலைகள்!
- சரளா ராம்பாபு
என் அப்பா கண்ணன் எப்பொழுதும் ஒயிட் அண்ட் வைட் தான் அணிவார் . அந்த காலகட்டத்தில் 1960 களில் நான்கு ஏக்கர் கொண்ட விவசாய நிலத்தில் "மெத்தை" வீட்டில் வாழ்ந்தோம். வீட்டைச் சுற்றிலும் மண். நான் மண்ணில் விளையாடி கொண்டு இருக்கும் பொழுது அப்பாவின் வண்டி ஓசை கேட்டு அப்படியே ஓடி போய் காலை கட்டிக் கொள்வேனாம்.. .. எனவே எனக்காக தனது சிக்னேச்சர் டிரஸ்ஸை தியாகம் செய்துவிட்டார் தந்தை.
அப்பொழுது எங்கள் வீடு மண் வீடு தான். சுவற்றில் எனக்கு எட்டும் வரை எல்லா மண்ணும் சுரண்டப்பட்டு என்னால் சுவைக்கப்பட்டதாம். அம்மா சொல்லி நான் கேட்டதுண்டு. சித்தப்பா சுவற்றில் மிளகாய் பொடியை தேய்த்து வைப்பாராம்.
என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பெண்கள் மற்றும் கடைத்தம்பி.
விளையாட்டு
விளையாட்டு என்றால் 4 ஏக்கர் வரை ஒருவரை ஒருவர் அடித்துப் பிடித்துக் கொண்டு துரத்தி துரத்தி விளையாடி மகிழ்வோம். எளிதில் நாங்கள் ஒருவரிடம் பிடிபட மாட்டோம். தாயம், சீட்டு விளையாட்டு போன்ற விளையாட்டுகளில் என் தங்கை தோற்று விட்டால் என்னை கடித்து விடுவாள். நான் சற்று சிகப்பு நிறமாக இருப்பதால் கை சிவந்து விடும். என் அப்பா வரும் பொழுது, அந்த தழும்பு மறைந்து விட்டிருக்கும். ஆனால் சாமர்த்தியமாக நான் அந்த தடயத்தை மீண்டும் நானே கடித்து அப்பா இடம் காட்டி தங்கையை அடி வாங்க வைப்பதில் எனக்கு அலாதி சந்தோஷம்.
எங்கள் குழந்தைகள் அவர்களின் மழலை சேட்டை செய்த பொழுது எங்களுடைய இந்த சிறு சிறு ஜஸ்ட் ஃபார் fun.. களையும் நினைவு கூர்ந்து அப்பொழுது மகிழ்வோம்.
நாங்கள் மரங்களில் தான் எங்கள் விடுமுறையை கழிப்போம். மாங்காய் பறிக்க மரத்தின் மேலே ஏறிய செங்கதிர் என்ற அன்றைய குழந்தை ஒரு கையில் மாங்காய் லேசாக எட்டவும் மற்றொரு கையையும் அந்த மாங்காயை பறிக்க நீட்டி கீழே விழுந்து கை முறிந்தது. இன்றைக்கு அவருடன் அவருடைய புத்திசாலித்தனத்தை பகிர்ந்து கொண்டு சிரித்துக்கொண்டே இதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். இப்பொழுது அந்த குழந்தை என் தங்கையின் கணவர்.
விருந்தோம்பல் ::
எங்கள் தாத்தாவின் பூர்வீக இடம்தான் எல்லா உறவினர்களுக்கும் என்பதால் அனைத்து உறவினர் உறவினர் குழந்தைகளும் எங்கள் வீட்டிற்கு தான் வருவார்கள். மரத்தில் இருக்கும் இளநீர் எல்லாம் காலியாகும். எங்களுக்கும் அந்த சமயத்தில் மட்டும்தான் இளநீர் கிடைக்கும். எங்கள் குசேல குடும்பம் எங்கும் விடுமுறைக்கு சென்றதில்லை. ஆனால் அதைப் பற்றி அந்த குழந்தை பருவத்தில் அவ்வளவாக வருத்தப்பட்டதில்லை. காரணம் எங்களுடன் ஆடு மாடு, கோழிகள் போன்ற ஐந்து அறிவு ஜீவிகள் விளையாட எக்கச்சக்கமாக இருந்ததே.
என் மூன்றாவது தங்கை குழந்தையாக இருந்த பொழுது செருப்பு பழையதாகிவிட்டது என புதியது கேட்டால் யாரும் செவிமடுக்கவில்லை. சைக்கிளில் அமர வைத்து பள்ளியில் இருந்து வீட்டிற்கு அழைத்து வரும்பொழுது நல்ல காலணி ஒன்றை நழுவ விட்டு விட்டு வந்து விட்டாள். பின்னர் தான் புதியது கிடைத்தது.
திருமணம் ::
என் அத்தை திருமணத்தின் போது நான் ஐந்து வயது சிறிய குழந்தை. சென்னை ஆதம்பாக்கத்தில் இருந்து வந்த உறவினர் ஒருவர் உங்கள் வீட்டில் டியூஷன் எடுக்கிறீர்களா என்று எங்களை பார்த்து கேட்டார்.. எனக்கு அதற்கான அர்த்தம் விளக்கம் புரியவில்லை. நாங்கள் அனைவரும் ஒரே மாதிரி ஃபிராக் அணிந்திருந்ததை பார்த்ததும் தான் எல்லோரும் சகோதர சகோதரிகள் என்று அவர் புரிந்து கொண்டார் போலும்.
வாழ்வியல் அனுபவம்
நாங்கள் ஐந்து ,ஆறு கோழி மற்றும் அதன் குஞ்சுகளுடன் சனி, ஞாயிறுகளில் பக்கத்தில் இருக்கும் காலி கிரவுண்டுக்கு சென்று அதனை வெளியே விடுவோம். ஒரு சிறு கழுகு கூட கீழே வராது. தாய்க்கோழியின் கேர்டேக்கிங் வியக்க வைக்க கூடிய வினோதம். அது தன் குஞ்சுகளுக்கு மண்ணை கிளறி சங்கேதக் குரல் எழுப்பி உண்ண வைத்த குழந்தை பருவம் இனிமையாக கண்களில் வந்து நிழலாடுகிறது.
தாலாட்டும் ஊஞ்சல் ::
புளிய மரத்தில் பெரிய பெரிய தாம்பு கயிறு கட்டி வைத்திருப்போம். நினைத்தபோது கயிற்றில் பெட்ஷீட் போட்டு ஊஞ்சல் ஆடி விளையாடிய சுகம் சொல்லி மாளாது.
நான் விளையாடிய அந்த இடத்திலேயே என்னுடைய மகனையும் அழைத்துச் சென்று அந்த இடத்தைக் காட்டி நாங்கள் விளையாடியதை அவனிடம் பகிர்ந்து கொண்ட சுவாரசியம் அலாதி.
குரு பக்தி ::
நான் சைக்கிளில் பள்ளிக்கு செல்வேன். வழியில் ஆசிரியரை பார்த்தால் டீபால்ட் ஆக இறங்கி விடுவேன். நான் படித்தது நடுநிலைப்பள்ளி. பள்ளி முடியும் தருவாயில் ஆசிரியர் என்னை அழைத்து இந்த மாணவியைப் போல் ஆசிரியைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என என்னை முன்னுதாரணப்படுத்தினார்கள். அப்பொழுது எதுவும் விளங்கவில்லை. ஆனால் கருத்து மனதில் பதிந்தது. ஆசிரியரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று என் மகனுக்கு தெளிவுபடுத்த பிற்காலத்தில் கை கொடுத்தது.
குழந்தைப் பருவ சுற்றுலா பயணம்.
நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது அனைவரையும் (A,B) வரிசையாக மூன்றாம் வகுப்பு வரிசை வரிசையாக நிற்க வைத்து நடக்க வைத்து அழைத்து சென்றார்கள்.
சுற்றுலாவுக்கு வந்த இடம் எங்கள் வீட்டு மாமர தோப்பு. வீட்டிற்கு வந்த பிறகுதான் என் மரமண்டைக்கு உரைத்தது. 90களில் பிறந்தவர்கள் பலர் என்னைப் போல குழந்தை பருவத்தில் வெகுளியாக இருந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
அ முதல் அவர் (hour) சைக்கிள், மற்றும் ஆடு மாடு ஆகிய ஐந்தறிவு ஜீவன்களுடன் பழகும் ஆறாம் அறிவையும் புகட்டிய என் தாத்தா ஆசான் அவர்களுக்கு நன்றி கூறி கட்டுரையை முடிக்கிறேன் .
பத்திரிக்கை துறை வாயிலாக தடம் பதிக்கும் தளிர்களில் என்னுடைய குழந்தை பருவத்தையும் இன்றைய தினத்தில் நான் வாழ்ந்த சேலத்தில் இருந்தே நினைவு கூறுவதில் பெருமை அடைகிறேன்.
நன்றிகள் பல.
(திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர். தடம் பதிக்கும் தளிர்கள் மையமும், தென்தமிழ் இணையதளமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி வகுப்பிலும் கலந்து கொண்டிருப்பவர்)