மாவீரன் பொல்லான் சிலை.. திறந்து வைத்து புகழாரம் சூட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
- சுமதி சிவக்குமார்
ஈரோடு: மாவீரன் பொல்லான் சிலை மற்றும் அரங்கத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில் ரூபாய் 4.90 கோடி மதிப்பில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத்தளபதியான மாவீரன் பொல்லான் திருவுருவச்சிலை மற்றும் மணிமணடபம் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோட்டில் அரசு நிகழ்ச்சியில் இன்று கலந்து கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் சிலையையும், மணிமண்டபத்தையும் இன்று திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவீரன் பொல்லான் வரிசுதாரர்களுக்கு சால்வை போர்த்தி மரியாதையும் செலுத்தினார். வாரிசுகளுக்கு உரிய வீட்டு மனைப் பட்டாக்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் முதல்வர் பேசும்போது, ஆங்கிலேயர் ஆதிக்கத்திற்கு எதிராக போர் கொடி உயர்த்திய தன்மான பெருஞ்சுடர் ஒப்பற்ற விடுதலை வீரர் தீரன் சின்னமலை. விடுதலை உணர்வை மண்ணில் விதைத்துச் சென்றார். அவரது படைத்தளபதியாக திகழ்ந்த பெருமைக்குரியவர்தான் மாவீரன் பொல்லான். அவரது சிலையை திறந்து வைப்பது பெருமை கொள்கிறேன்.
ஈரோடு என்றாலே அது மஞ்சள் நகரம், சந்தன நகரம், தொழில் நகரம், பெரியாரைத் தந்த மண் ஈரோடு. எனவே ஈரோடுக்கு எப்போது வந்தாலும் பெருமையாக உணர்வேன் என்று கூறினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பொல்லான் அரங்கத்தைத் திறந்து வைத்த பின்னர் அதைச் சுற்றிப் பார்த்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த, மாவீரன் பொல்லான் படைக்களத்தில் பயன்படுத்திய ஆயுதங்களையும் பார்வையிட்டு வியந்தார்.
(சுமதி சிவக்குமார், தென்தமிழ் இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)