மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி மத்திய பாஜக அரசு வெட்கப்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

Meenakshi
Feb 27, 2026,06:05 PM IST

சென்னை: மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை  எண்ணி மத்திய பாஜக அரசு வெட்கப்பட வேண்டும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான ஊழல் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா ஆகியோருக்கு எதிராக சிபிஐ சுமத்தியிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்கில் எந்தவொரு சதித் திட்டமும் நடந்ததற்கான சான்றுகள் இல்லை. சிபிஐ-யின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. ஜோடிக்கப்பட்ட வழக்காக இது தெரிகிறது. குற்றப்பத்திரிகை பெரிதாக இருக்கிறதே தவிர அதில் எந்த ஒரு ஆதாரமும் இல்லை, வெற்றுக் காகிதங்களாகவே அவற்றைப் பார்க்க முடிகிறது என்று கடுமையாக விமர்சித்தது.




இதனையடுத்து நீதிமன்றம் தன்னை நிரபராதி என்று அறிவித்தவுடன், அரவிந்த் கெஜ்ரிவால் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நானும் மனிஷ் சிசோடியாவும் ஒரு பொய் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டோம். எங்கள் மீது சேறு பூசப்பட்டது. இன்று உண்மை வென்றுள்ளது. நான் மிகவும் நேர்மையானவன். கடவுள் எங்களுடன் இருக்கிறார் என்று தெரிவித்திருந்தார்.


இந்நிலையில், இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய பாஜக அரசு குறுகிய அரசியல் லாபத்திற்காக விசாரணை அமைப்புகளின் நம்பகத்தன்மையை அடகு வைக்கக்கூடாது.  டெல்லி மதுபான கொள்கை வழக்கின் தீர்ப்பை எண்ணி பாஜக அரசு கொஞ்சமாவது வெட்கப்படுங்கள். மதிப்பிற்குரிய எனது நண்பர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மனிஷ் சிசோடியா இருவரும் இவை அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொண்டு, உண்மையை வெளிகொண்டு வந்ததற்கு பாராட்டுகள் என்று தெரிவித்துள்ளார்.