சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திமுகவில் இணைந்திருப்பது அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்க முடியாது. முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த அதிரடியான செயலாகவும் இதை திமுகவினர் வர்ணிக்கின்றனர்.
தமிழக அரசியல் களத்தில் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்றுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் கோலோச்சிய தமிழக அரசியலில், ஒரு முன்னாள் முதலமைச்சர் தடம் மாறி மாற்றுக்கட்சியில் இணைந்திருப்பது இதுவே முதல்முறை.
இதற்கு முன்பு இப்படி ஒரு சம்பவம் திமுக, அதிமுகவில் நடந்தது இல்லை. ஏன் அதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் கட்சிக்காலத்திலும் கூட நடந்தது இல்லை.
தமிழக அரசியலைப் பொறுத்தவரை, ஒரு கட்சியின் முன்னாள் முதல்வர் மற்றொரு கட்சியில் இணைவது என்பது நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வந்தது. காரணம், தமிழ்நாட்டில் அரசியல் ரீதியான பூகோள நிலை அப்படி உள்ளது.
திமுக - அதிமுக இடையே கடும் மோதல் நிலவிய காலத்திலும் சரி, கட்சியில் பிளவுகள் ஏற்பட்ட காலத்திலும் சரி, முதல்வர் பதவியில் இருந்த எவரும் மாற்றுக்கட்சிக்குச் சென்ற வரலாறு கிடையாது. இந்த மரபை உடைத்து, மூன்று முறை தமிழக முதல்வராகப் பதவி வகித்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது திமுகவில் இணைந்திருப்பது தமிழக அரசியலின் போக்கையே மாற்றியமைத்துள்ளது.
அதிமுக உருவான காலத்திலிருந்தே அக்கட்சியில் பயணித்து, விசுவாசத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டவர் ஓ.பி.எஸ். அந்தக் கட்சியில் இருந்து முதல்வர் பதவி வரை உயர்ந்த ஒரு தலைவர், இன்று அதே அதிமுகவிற்குப் போட்டியாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஒரு புதிய வரலாறும் கூட.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை" என்ற கூற்றுக்கு ஏற்ப, தமிழகத்தின் அரசியல் களம் ஒரு புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்கிறது. ஒரு முன்னாள் முதல்வரே திமுகவை நாடி வருவது, முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆளுமைக்கும், அவரது ஆட்சி நிர்வாகத்திற்கும் கிடைத்த அங்கீகாரமாகவே அக்கட்சியினரால் பார்க்கப்படுகிறது.
ஓபிஎஸ்ஸை தவற விட்டு விட்டதா பாஜக?
ஆனால் ஓ.பன்னீர் செல்வம் உடனடியாக இந்த முடிவுக்கு வரவில்லை. நீண்ட காலம் அவர் காத்திருந்துதான் இந்த முடிவை எடுத்துள்ளார். காத்திருந்தது எதற்காக என்றால் அதிமுகவை ஒருங்கிணைக்கக் காத்திருந்தார். முயற்சிகள் எடுத்து வந்தார். அது முடியாமல் போகும் நிலை ஏற்பட்டபோது அதிமுகவில் என்னை சேர்த்துக் கொண்டால் போதும் என்ற அளவுக்கு அவர் இறங்கி வரவும் செய்தார். அதுவும் நடக்கவில்லை.
சரி அதிமுகவில் இணையும் வாய்ப்பில்லையா, பரவாயில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலாவது சேருங்கள் என்று பாஜகவிடம் கெஞ்சாத குறையாக கேட்டுப் பார்த்தார். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் அவர் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஓ.பி.எஸ்ஸுக்காக பாஜகவில் ஆதரவாக இருந்து வந்தவர் முன்னாள் தலைவர் அண்ணாமலைதான். அவரும் கூட ஓ.பி.எஸ்ஸுக்காக முயன்று பார்த்ததாக சொல்கிறார்கள்.
ஆனால் அதிமுக தலைமை, ஓபிஎஸ்ஸை எந்த ரூபத்திலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்பதால், வேறு வழியில்லாமல் ஓபிஎஸ்ஸை கைகழுவியது பாஜக தலைமை. எந்த வகையிலும் தனக்கு இங்கு இனி இடம் இல்லை என்பதை உணர்ந்து கொண்ட ஓபிஎஸ் வேறு வழியில்லாமல் திமுகவுக்குப் போய் விட்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தீவிரமாக செயல்பட தீர்மானித்த காரணத்தால்தான் அவர் திமுக முடிவை எடுத்துள்ளார். போதும் விட்டு விடலாம் என்று நினைத்திருந்தால் சுயேச்சையாக போட்டியிட்டிருக்கலாம் அல்லது அரசியலை விட்டு ஒதுங்கிப் போயிருக்கலாம். அந்த முடிவைத்தான் அவர் எடுப்பார் என்று எதிர்பார்த்தார்கள்.
ஆனால் திமுகவில் இணைந்ததன் மூலம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தீவிரமாக அரசியல் செய்யப் போவதை உணர்த்தியுள்ளார் ஓபிஎஸ் என்றே உணர முடிகிறது.
தினகரனை சேர்த்தது போல ஓபிஎஸ்ஸையும், இன்னொரு பக்கம் புதுக் கட்சி கண்டுள்ள சசிகலாவையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் இணைத்திருந்தால் சரியாக இருந்திருக்கும். அதை பாஜக ஏன் செய்யவில்லை என்றும் அதிமுக பாஜகவுக்குள்ளேயே ஆச்சரியக் கேள்விகள் எழுந்துள்ளன.
Short Story: பிடிவாதம்!
The Only Limits Are the Limits You Believe
வருமா ஒரு நாள்?
தொகுதியின் பெயருக்குப் பின் ப்ராக்கெட் தேவையில்லை .. முதல்வருக்கு விசிக எம்.பி கோரிக்கை
Work from Home: நவீன வாழ்வியலின் வரப்பிரசாதம்.. ஆனால் அதன் அருமை பலருக்குப் புரியலையே!
நேபாள பேரிடருக்கு நிலநடுக்கம் அல்ல.. பனிப்பாறை சரிவே பேரழிவிற்குக் காரணம்: அமெரிக்கா
வெயிலும் கொஞ்சம் மூடும் போது மயிலும் வந்து ஆடும்!
சிந்தனைச் சிதறல்.. அச்சத்தைக் களையாமல் உயர் உச்சத்தைத் தொட முடியாது!
திருமண நாள் வாழ்த்து.. ஒரு மணமகளின் வாழ்த்துரை
{{comments.comment}}