4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும்: எம்பிக்களுக்கு முதல்வர் முகஸ்டாலின் உத்தரவு

Meenakshi
Sep 23, 2025,03:38 PM IST

சென்னை: நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நாடாளுமன்ற, உறுப்பினர்கள் அனைவரும் தற்போது நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற மக்கள் சந்திப்பு முகாம்களில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்ட மகளிரைச் சேர்த்திடும் வகையில் இந்தப் புதிய முகாம்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். 




அத்துடன் மக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்துக் கேட்டறிந்து, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அதேபோல நாடாளுமன்றம் நடைபெறும் நாட்களைத் தவிர்த்து, குறைந்தது வாரத்தில் நான்கு நாட்கள் தங்களது தொகுதியில் தங்கி, மக்களைச் சந்தித்து அவர்களுக்கான பணிகளைச் செய்ய வேண்டும்.

 

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளையும் வென்று சாதனை படைத்தது. இதற்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அரும்பாடுபட்டனர். அதேபோல், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களின் வெற்றிக்குக் கடுமையாகப் பாடுபட வேண்டும். மேலும் தாங்கள் ஆற்றிய மக்கள் பணிகள் மற்றும் நாடாளுமன்றத்தில், நலனுக்காகக் குரல் கொடுத்தது பற்றிய அறிக்கையை, 15 நாட்களுக்கு ஒருமுறை  அளித்திட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.