இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் மத்திய அரசை எதிர்பார்ப்பது?...சட்டசபையில் முதல்வர் ஆவேசம்
சென்னை: தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று (18.02.2026) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நடைபெற்றன. இதில் உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில சுயாட்சி மற்றும் மத்திய-மாநில அரசு உறவுகள் குறித்து மிக முக்கியமான கருத்துக்களைப் பதிவு செய்தார்.
சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "மாநிலங்களுக்கான உரிமைகளைப் பெறுவதற்கு இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் நாம் போராடிக் கொண்டே இருக்க வேண்டும்?" என்ற கேள்வியை முன் வைத்தார். ஒரு கூட்டாட்சித் தத்துவத்தில் மாநிலங்களுக்கு உரிய அதிகாரங்களும் நிதிப் பங்கீடும் தானாகவே வந்து சேர வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஒவ்வொரு சிறு உரிமைக்காகவும் ஒன்றிய அரசிடம் போராடிப் பெற வேண்டிய சூழலே இன்றும் நிலவுவதாக அவர் குறிப்பிட்டார்.
மாநிலங்களின் நிதித் தன்னாட்சி மற்றும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்துப் பேசிய அவர், "எல்லாவற்றிற்கும் மாநில அரசுகள் ஒன்றிய அரசின் தயவை எதிர்பார்த்து நிற்கும் நிலை இன்றும் உள்ளது. ஒன்றிய அரசு கொடுக்கும் இடத்திலும், நாம் வாங்கும் இடத்திலும் இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் இருப்பது?" என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மாநிலங்கள் தங்களுக்குத் தேவையான திட்டங்களைச் சுதந்திரமாகச் செயல்படுத்த முடியாமல், நிதி ஆதாரங்களுக்காக ஒன்றிய அரசைச் சார்ந்திருக்கும் நிலை மாற வேண்டும் என்பதை அவர் தனது பேச்சில் வலியுறுத்தினார்.
மாநில சுயாட்சி என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அடிப்படைத் தேவை என்பதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், "மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி" என்ற கொள்கையை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தினார். அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும் என்றும், மாநிலங்களுக்கு அதிக அளவிலான இறையாண்மையும் அதிகாரமும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த விவாதம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது என்பதையும் முதல்வர் தனது உரையின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். மாநிலத்தில் சுயாட்சி என்பதை மீண்டும் மு.க.ஸ்டாலின் சட்டசபை வலியுறுத்தி இருப்பது காங்கிரசின் ஆட்சியில் பங்கு என்ற நிபந்தனையை திமுக நிராகரித்து விட்டதை காட்டுகிறதே. அதே போல், மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி தான் அமையும் என காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை பேசி உள்ளது, திமுக.,வின் பேச்சுக்களை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டு, கூட்டணியில் தொடர்ந்து நீடிப்பதில் மிக உறுதியாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.