மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தென்காசி: தமிழ் மக்களை காப்பதுதான் கடமை என செயல்பட்டு வருகிறோம். அதனால் மக்களை காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தென்காசியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டார். அப்போது, 141 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவிலான 117 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, 291 கோடியே 19 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 83 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 2,44,469 பயனாளிகளுக்கு 587 கோடியே 39 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன்பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாட்டை அனைத்து வகையிலும், அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றி வருகிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்பதை நோக்கமாக கொண்டு, அனைத்து மாவட்டங்களையும் வளர்த்து வருகிறோம். தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று இதுபோன்ற அரசு விழாக்களில் நான் பங்கேற்று, அந்தந்த மாவட்டத்துக்குத் தேவையான திட்டங்களை தொடங்கி வைத்துக் கொண்டிருக்கிறேன்.
ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் நாள்தோறும் 1000 மூட்டைகள். தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களை காப்பதுதான் கடமை என செயல்பட்டு வருகிறோம். அதனால் மக்களை காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம். ஆட்சிக்கு வந்து மூன்று முறை இயற்கை பேரிடர்களை நாம் சந்தித்திருக்கிறோம். வேண்டிய உதவிகளை செய்து மக்களைக் காப்பாற்றினோம்.
ஆனால், பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்புகளை சரி செய்ய, நிவாரணப் பணிகளுக்காக நாம் கேட்ட 37 ஆயிரம் கோடி ரூபாயை ஒன்றிய பாஜக அரசு வழங்கியதா? இல்லை! இதுவரைக்கும் வழங்கவில்லை. ஏன் வழங்கவில்லை? அப்படி வழங்கினால், தமிழ்நாடு சீராகிவிடும், வளர்ந்துவிடும். அது நடைபெறக் கூடாது என்று நினைக்கிறது மத்திய அரசு. ஒன்றிய அரசு பணம் வழங்கினாலும், வழங்காமல் போனாலும் தமிழ் மக்களைக் காப்பது தான் நம்முடைய கடமை என்று செயல்பட்டு வரக்கூடிய அரசு தான் இந்த திராவிட மாடல் அரசு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஆனால், என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை.
தேர்தல் ஆணையம் மூலமாக, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் என்கின்ற பெயரில் நம்முடைய வாக்குரிமையை பறிக்கின்ற சதியை அறிவித்திருக்கிறார்கள். ஏற்கனவே, பீகாரில், இதனால் என்ன நடந்தது என்று நாம் பார்த்தோம். பா.ஜ.க. தோல்வி உறுதியானால், வாக்காளர்களையே நீக்கத் துணிந்தார்கள். அதே Formulaவை தமிழ்நாட்டிலும் இப்போது முயன்று பார்க்கிறார்கள்.
தொடக்கம் முதலே இந்த சதியை உணர்ந்து நாம் எல்லோரும், அனைத்து வகையிலும், இதை எதிர்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போது கேரளாவும் நம்முடன் இதில் இணைந்திருக்கிறார்கள். இது தொடர்பாக, நம்முடைய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க, வருகின்ற நவம்பர் 2-ஆம் தேதி அன்று நான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டயிருக்கிறேன். அழைப்பு விடுத்திருக்கிறேன். அனைவருக்கும் அழைப்பு சென்றிருக்கிறது.
இந்த மேடையிலிருந்து மீண்டும் உறுதியாக சொல்கிறேன். ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமைதான்! அதை எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்க மாட்டோம்! வாக்குரிமைப் பறிப்பு, வாக்குத் திருட்டு போன்ற பா.ஜ.க.வின் முயற்சிகளை முறியடிப்போம்! தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை காப்போம்!
மக்களாட்சியைக் காப்பாற்றுவதற்கான இந்த முன்னெடுப்பில், அனைத்துக் கட்சிகளும் அரசியல் வேறுபாடுகளை கடந்து பங்கெடுக்க வேண்டும் என்று நான் இந்த மேடையிலிருந்து அவர்களுக்கெல்லாம் அழைப்பு விடுக்கிறேன். இயற்கைப் பேரிடராக இருந்தாலும், செயற்கையான அரசியல் சதியாக இருந்தாலும் எல்லாவற்றிலும் இருந்து மக்களைக் காப்பதுதான் என்றைக்குமே நம்முடைய பணி!
நான் முதலில் சொன்னது போல, மகத்தான உங்களை மகிழ்விக்கவே இந்த ஆட்சி! மக்களைக் காக்கவே இந்த ஆட்சி! மக்களை வளர்க்கவே இந்த ஆட்சி! மக்களுக்கு தேவையானதை கொடுக்கவே இந்த ஆட்சி! இந்த நல்லாட்சி எந்நாளும் தொடரும்! தொடரும்! தமிழ்நாட்டின் வளம் பெருகும்! பெருகும் எனத் தெரிவித்துள்ளார்.