பணமும் ரசிகர்களும்!

Su.tha Arivalagan
Dec 06, 2025,01:19 PM IST

- க.யாஸ்மின் சிராஜூதீன் 


நீ என்ன  அரசனா..

அனைத்தையும் உன் அதிகாரத்தின் கீழ் அடக்கி விட்டாயே....


நீ என்ன சர்வாதிகாரியா....

உன் கட்டளைக்கு அனைவரையும் ஆட்டிப்படைக்கிறாயே ....


நீ என்ன படைப்பாளியா  ...

பூமித்தாயின் பிள்ளைகளை 

ஏழை ,பணக்காரன் என உயர்வு,தாழ்வு காட்டுகிறாயே....


நீ என்ன  நடிகனா...

அனைவரையும் உன் ரசிகர்கள் 

ஆக்கிவிட்டாயே.....




நீ என்ன பச்சோந்தியா 

இருப்பவர்கையில் பணக்காரனாகவும்...

இல்லாதவர்கள் கையில் ஏழையாகவும் உருவம் கொள்கிறாயே....


 நீ என்ன  ஏக்கமா...

உன்னை அடைய  எத்தனை எத்தனை

ஏக்கங்கள்....


நீ என்ன  சொர்க்கமா...

வசதிபடைத்தவர்களுக்கு அளவில்லா 

ஆடம்பரம் அளிக்கிறாயே...


நீ என்ன கொடுமையா ...

உன்னை தினம் தினம் தேடுவோரை 

வெயிலில் வதைக்கிறாயே....


நீ என்ன போராட்டமா....

உன்னை கையில்  ஏந்தி மகிழ 

எத்தனை எத்தனை போராட்டங்கள் 

களம் காணச் செய்கிறாயே....


நீ என்ன மரியாதையா....

உன்னை பெற்றவருக்கு மட்டுமே 

தருகிறாயே....


நீ என்ன  பழமொழியா ....

பணம்  பத்தும் செய்யும் 

பணம் பாதாளம் வரை பாயும் 

என உரக்கச் சொல்கிறாயே....


நீ என்ன உலகமா...

நீ  இன்றி நானில்லை  என அனைவரும் மொழிகின்றனரே...


நீ யாரோ  யவரோ காகிதமோ ...

மதிப்பிழப்பு செய்யும் வரை அதிகாரியே....

அனைவர்கையிலும் புரளுவாய்

மதிப்பு என்பதனை அளிப்பாய் என்ற நம்பிக்கையில்  உன் ரசிகர்கள்....


(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும்  whatsApp வழியாக  கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)