Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
சென்னை: மோன்தா புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே அக்டோபர் 28ல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று காலை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, மேற்கு - வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதியில், இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
இது, அரபிக்கடல், வங்கக்கடல் என ஒரே நேரத்தில் இரு கடல் பகுதிகளிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது. தற்போது சென்னைக்கு 970 கி.மீ தென் கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 7 கி.மீ வேகத்தில் வடக்கு வடமேற்கு திசையில் நகர்கிறது. நாளைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரம் அடையும். நாளை மறுநாள் புயலாக மாறும்.
அக்டோபர் 28ம் தேதி மாலை அல்லது இரவில் ஆந்திராவின் மசூலிப்பட்டினம்- கலிங்கபட்டினம் இடையே காக்கிநாடா பகுதியில் கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது 90 முதல் 110 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக, அக்டோபர் 28ம் தேதி தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.