மாசமோ மார்கழி மாசம்.. வாசலில் கலர் கலர் கோலம்.. தினம் ஒரு கோலம்!
- பாவை.பு.
பெண்கள் வாழ்வியலோடு பின்னி பினைந்தது கோலம் .. அதிலும் மார்கழி மாதம் வந்து விட்டால்.. அது ஒரு விழாக்கோலம்.
சேலையை வரிந்து கட்டிக் கொண்டு விதம் விதமாக வாசல்களையும், தெருக்களையும் அடைத்துக் கொண்டு கோலம் போடாத பெண்களைப் பார்க்கவே முடியாது.
கோலம் என்றால் அழகு என்று பொருள்.. மேலும் ஆன்மிகம் கலாச்சாரம் பாரம்பரியம் பண்பாடு ஆகியவற்றையும் பிரதிபலிக்கிறது.
அதுமட்டுமல்ல இறைவனின் அலங்காரத்தையே கோலம் என்று தான் வர்ணிக்கிறார்கள் (நடராசர் - அர்த்தநாரீஸ்வரர் ) என்றால் கோலத்தின் மகிமையை உணர்ந்து கொள்ள முடிகிறது.
பெண்கள் ஆண்டு முழுவதும் வாசலில் கோலம் போட்டாலும் மார்கழி மாதம் என்றால் ஒரு வித தனி உற்சாகம் பிறக்கிறது. அதுவும் கிராமப்புறங்களில் மார்கழியில் கோல போட்டிகள் நடைப்பெறுவதுண்டு. வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளும் வழங்குவார்கள்.. மாதம் முழுவதும் ஊரே திருவிழாவாக தான் இருக்கும்.
கோலம்செய் துங்க கரிமுகத்து தூமணியே என்று அவ்வையார் பாடுகிறார்.. இங்கு கோலம் என்றால் அழகு என்று பொருள். அவர் அழகுக்காக கோலத்தையே உவமையாக பயன்படுத்துகிறார்.
அழகு நிறைந்த பெருமை மிகுந்த யானை முகத்துடைய அருளே எனக்கு சங்க தமிழ் மூன்றும் தா என்கிறார்.
மஹாகவி பாரதியும் தன் பங்கிற்கு ... பலவித வண்ணம் வீட்டை பரவ நடத்திடும் சக்தி நிலையமே நம்மனை என்று நல்ல மனைக்கு இலக்கணம் போற்றுகிறார்...
இதிலிருந்து நல்ல மனைக்கு மங்களமே கோலம் ஆகிறது .... ஆக இவ்வளவு சிறப்பு மிக்க இந்த மார்கழி மாதம் முழுவதும் தினம் ஒரு கோலம் காண்போம் வாருங்கள்.. தொடர்ந்து நம்முடன் இணைந்திருங்கள்.
(பாவை.பு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)