மடிக்கணினி திட்டத்தை முடக்கும் எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Meenakshi
Dec 18, 2025,04:10 PM IST

சென்னை: மடிக்கணினி திட்டத்தை முடக்க நினைக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


திமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கினோம். ஆனால், தற்போது வாக்கு செலுத்தும் வயது வந்தோருக்கு லேப்டாப் வழங்க போகிறார்கள். இதன் மூலம், 10 லட்சம் வாக்குகளை பெற திட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். 


இதற்கு பதில் அளிக்கும் விதமாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கிடைப்பதை வரவேற்கும் பரந்த மனப்பான்மை கூட இல்லாத எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி. இந்தத் திட்டத்தை எப்படியாவது சீர்குலைத்துவிட முடியாதா என்று முயற்சி செய்கிறார்.


கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை முடிந்து கல்லூரிக்கு  வரும் மாணவர்களுக்கு அவர்கள் வந்தவுடன் லேப்டாப் வழங்கப்படும். வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும்.




கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில், செயற்கை நுண்ணறிவுக்கு (AI) ஏற்றவாறு, அதிவேக Processor மற்றும் நீண்டநேரம் தாங்கும் Battery என அத்தனை நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த லேப்டாப் வழங்கப்பட இருக்கிறது.


அமெரிக்காவின் Perplexity AI நிறுவனத்தோடு எல்காட் நிறுவனம் ஒரு சிறப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. அதன்படி 6 மாத காலத்திற்கு Perplexity Pro AI வசதி கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது எனத் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி அல்ல அவர்களது டெல்லி ஓனர் நினைத்தாலும் மாணவர்களுக்கு லேப்டாப் தருவதை தடுக்க முடியாது. தமிழக மாணவர்கள் படித்துவிடக்கூடாது என்ற பாசிச பாஜகவின் எண்ணத்தை எடப்பாடி பழனிச்சாமி பிரதிபலிக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.