திருமுக்கீச்சரம் என்ற உறையூர்.. தேவாரத் திருத்தலங்கள் (2)
- எழுத்தாளர் சைவ சித்தாந்தச்சுடர் சிவ. பா. சுமதி
இறைவர்: பஞ்சவர்ணநாதர்
இறைவி: காந்திமதியம்மை
தீர்த்தம்: பஞ்சவர்ணதீர்த்தம்
தலவிருட்சம்: வில்வம்
பாடியோர்: திருஞானசம்பந்தர் 11 பாடல்கள்.
திருச்சி மாநகரின் ஒரு பகுதி ஊர் எனப்படுவது உறையூர் என்பது பண்டைத் தொடர். உறையூர் எனப் பெயரிட்டே நகரப் பேருந்துகள் செல்கின்றன. பஞ்சவர்ணசுவாமி கோவில் நிறுத்தத்தில் இறங்கத் திருக்கோவில் அண்மையில் உள்ளது. தன்னை எதிர்த்து வந்த யானை ஒன்றினைக் கோழி ஒன்று தன் மூக்கால் கொத்தி வென்றமையால் முக்கீச்சரம் எனப்பெயர் பெற்றது என்பர்.
கோழியூர் என்றும் கூறுவர். நான்முகன் இங்கு வந்து பூஜை செய்து வணங்கும் போது பெருமான் ஈசன் வேளைக்கு ஒரு வண்ணமாக மாறியதால் பஞ்சவண்ணநாதர் என வழங்கப்பட்டார். உதங்க முனிவருக்கு ஐந்து காலங்களில் ஐந்து வண்ணமாகப் பெருமான் காட்சியளித்ததால் பஞ்சவண்ணநாதர் எனப் பெயர் பெற்றார் என்றும் கூறுவர்.
சூரவாதித்த சோழன் நாகராசன் கன்னி காந்திமதியை மணந்து நாகலோகத்திலிருந்து கொண்டு வந்த ஐந்து லிங்கங்களை வேறொரு முறையில் பிரதிஷ்டை செய்ய எண்ணியபோது அவையாவும் ஒன்றாகி மூலலிங்கமாகி பஞ்சவண்ணநாதராக ஆயினார் என்றும் கூறுவர்.
கோச்செங்கட்சோழனும், புகழ்ச்சோழனாரும் முக்தி பெற்ற தலம் இது என்பதைத் திருஞானசம்பந்தப்பெருமான் பாடிய பதிகத்தால் (4,9 பாடல்கள் ) அறியலாம். முடியுடைய மூவேந்தரும் திருப்பரங்குன்றம் சென்று வணங்கினர் என்பதனைச் சுந்தரர் தமது திருக்கடைக்காப்பில் ' முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே' எனக் கூறியுள்ளதிலிருந்து அறியலாம். எனவே முடியுடைய மூவேந்தரும் வணங்கிய தலங்கள் திருமுக்கீச்சரமும், திருப்பரங்குன்றமும் எனத் தெரிந்து கொள்ளலாம்.
நீர்உளா ரும்மலர் மேல்உறை வான்நெடு மாலும்ஆய்ச் சீர்உளா ரும்கழல் தேடமெய்த் தீத்திரள் ஆயினான் சீரினால் அங்குஒளிர், தென்னவன், செம்பியன், வில்லவன் சேரும்மூக் கீச்சரத்து அடிகள்செய் கின்றதுஓர் செம்மையே!(2-120-9. 9)
(எழுத்தாளர் பா. சுமதி குறித்து.. பி.காம், பி.ஏ ஆங்கிலம் படித்தவர். மான்டிசோரி கல்வியாளர், யோகாவில் டிப்ளமோ முடித்தவர்.எழுத்தாளர், கவிஞர், பேச்சாளர். யோகா ஆசிரியர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் திருவண்ணாமலை குழுமத்தில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றவர், உலக சாதனையாளர் விருது பெற்றவர். பன்னிரு திருமுறைகளைப் பாடுவதில் தேர்ச்சி பெற்றவர்.நெய்வேலி புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து பல ஆண்டுகள் சிறு கதைகள், கவிதைகள் எழுதிப் பரிசு பெற்றவர்).