இனியத் தமிழ் இனியவையே தமிழ்
- டிலாணி ஸ்ரீதரன்
வானுயராத மனிதரெல்லாம்
தானுயர வாய்மொழியாகிய தமிழோ?
அழியாத செல்வமாகி ஒளியாகிய கல்வியெனும் கலையோ?
விழியாகி பார்வையில் மொழியாகிய உடலின் உயிர்ப்போ?
கலையாத அமைதியாக கண்ணசைவில் கதையளக்கும் கன்னித்தமிழோ?
உளியாக செதுக்கி வலிகளை உணர்வில் உரைக்கும் சிலையோ?
ஆழியாக ஆர்ப்பரித்து வழியாகி வாழ வைக்கும் முத்தமிழின் மூச்சோ?
வேலியாக பாதுகாக்கும் போலியற்ற மென்மையான புன்னகையின் நகலோ?
இழிவாக பேசிடுவோரையும் வழிநடத்தும் உதிரத்திலுறைந்த ஆயுதமோ!
ஒலியாக குரலாகி கலியுகமாளும் ஐயனின் குறளோ?
செழிப்பாக செந்தமிழாகி விழிப்புணர்வாக்கும் சமூகத்தின் சாட்டையடியோ?
முழி பிதுங்கிட கேள்வியாகி பழி போடுபவரை வாழியவே என வாழ்த்தும் கவியோ?
பொலிவிழக்காத மழலைகளின் களிப்படையும்
கள்ளங்கபடமற்ற குறுநகையோ?
பாலின் வெண்மையும் வாளின் கூர்மையுமான தன்மையோ?
வெளியுலகத்தை புடம் போடும் சுழியத்தின் பெறுமதியோ?
அளிக்கும் அமுதாக அருந்தமிழாக வாலியின் பாடலாகத் திகழ்ந்து
ஒரு சொல்லில் ஓராயிரம் கரு சுமந்து வாழட்டும் பல்லாண்டு!!!!!!!
வான் புகழ் கண்ட என் தாய் மொழி வாழிய வாழியவே!!!!