வரம்பற்ற வலிகள்.. வீழாத கண்ணீரும் விடியாத இரவாக்கிடும்!
- டிலாணி ஸ்ரீதரன்
ஆறாத வேதனைகளும் மாறாத சோதனைகளாகிட
வீழாத கண்ணீரும் விடியாத இரவாக்கிடும்,
மலராத வாழ்வும் புலராத பொழுதுகளாகிட
மங்காத ஒளியும் கலையாத இருளாக்கிடும்,
அயராத உழைப்பும் அணையாத விளக்காகிட
உறையாத உதிரமும் மெருகேறாத மேனியாகிடும்,
சுடாத சோறும் விடாத வறுமையுமாகிட
படாத பாடும் அறியாத அனுபவமாக்கிடும்,
கரையாத கவலைகளும் குறையாத குழப்பங்களுமாகிட
முதிராத வயதும் உதிராத பூக்களாகிடும்,
வருடாத இன்பங்களும் நெகிழாத இதயங்களாகிட
வாடாத முகங்களும் ஆடாத ஆழியாகிடும்,
மீளாத சோகங்களும் மீட்டாத வீணையாகிட
வளராத வம்புகளும் உள்ளாறாத தீயாகிடும்,
செவி சேராத வார்த்தைகளும் விழிக்காணாத கதைகளாகிட
தளராத தன்னம்பிக்கையும் வளராத வாழ்க்கையாக்கிடும்,
தெளிவில்லாத சிந்தனையும் ஓய்வில்லாத பிரச்சனையுமாகிட
வானுயராத குடும்பமும் தானுயராத நிழலாகிடும்,
வளையாத பாதைகளும் வாய்மொழியாத ரணங்களாகிட
உருகாத உள்ளமும் கல்லூறாத நீராகிடும்.