யார் மேலோர்? யார் கீழோர்?
- டிலாணி ஸ்ரீதரன்
ஈரடியில் உலகை வாய்மொழிந்த ஐயனின் இந்தக் குறளை ஐயமின்றி ஏற்பவர் எவரோ?
உலகத்துக்கு படியளக்க அல்லும் பகலும் பாடுபட்டு கலகத்துக்கு வழிவகுக்காது பேசும் பேரத்திற்கு விளைச்சலை விற்கும் உழவரா?
உழைப்பின் உதிரத்தை உறிஞ்சி மெய்யை மறைத்து களைப்பை போக்க கால் பிடிக்க சொல்லி பொய்யாய் நடிக்கும் வணிகரா?
வலை வீசும் கலை பயின்று கடலில் போராடி அலை பேசும் விலைபோல வருடலில் வாதாடி வந்த விலைக்கு மீன்களை விற்கும் மீனவரா?
பேச்சுத் திறமையில் ஆட்சி அமைத்து பெட்டிக்குள் இருப்பதை கட்டிப்போட்டு சில்லறையை வீசி மீன்களை கல்லறைக்குள் அடைக்கும் ஏற்றுமதியாளர்களா?
நாரிக் கிடக்கும் குப்பைகளை ஐயமின்றி வாரி எடுத்து நகரத்தை சுத்தமாக்க முகத்தை சுளிக்காத முன்கள தூய்மை பணியாளர்களா?
சொகுசு வாகனத்தில் பவுசுக்காட்டி கண்டதை தின்று வந்ததை வாந்தியாய் சாளரம் வழியே உழிழ்ந்து செல்லும் சில பணக்காரர்களா?
மண்ணை பிசைந்து கண்ணாய் காத்து உண்ணாமல் உறங்காமல் உழைத்து மட்பாண்டங்களை வனக்கும் குயவர்களா?
இமை திறப்பதற்குள் சுமையான இயந்திரத்தை இரவலாக்கி இதயத்தின் ஆழத்தை துளையிடுவது போல் ஆழியின் அடுக்கடுக்கான மணல் முகடுகளை மறைமுகமாக கடத்துபவர்களா?
புதுப்புது வடிவில் பாதணிகளையும் தளபாடங்களையும் சாதனையாக செய்து வியக்க வைக்கும் தினக்கூலி வர்க்கமா?
காலில் முள்ளும் தோளில் சிராய்வும் படாமல் தன் ஆசனத்தை சிம்மாசனத்தில் இருத்தி இழிவாய் பேசும் இதயமற்ற பெரியவர்களா?
செய்யும் தொழில்களை மெய்யோடு வணங்கி நெற்றி வியர்வையை கற்றையாக சிந்தி உழைப்புக்கேற்ற ஊதியமற்ற ஊழியர்களா?
தொடங்கும் பணியிலெல்லாம் பாமரர்களை முடக்கும் வித்தையை கையாண்டு பண்ணும் பாவங்களை மின்னும் விரல் நுனியில் வீரமாக நினைப்பவர்களா?
கஞ்சியை குடித்தாலும் மிஞ்சியதெல்லாம் கவலைகளாக தேக்கி பிள்ளைகளின் படிப்பை தொல்லையாக நினைக்காமல் கடனை உடனே வாங்கி மிஞ்சிய குருதிக்கு தஞ்சம் அடைபவர்களா?
வட்டியை மலையாய் உயர்த்தி கட்டிய காசையும் சுருட்டி காலத்திற்கும் எழும்ப விடாமல் செய்யும் மாமனிதர்களா?
அன்பு,பண்பு, பாசம் இவைகளுடன் கண்ணில் பயம் இல்லாது நெஞ்சில் உறுத்தல் கலைந்து மனதில் வஞ்சகம் மறந்து சூதுவாது காட்டாது சூட்சமமும் அறியாது வறுமையில் இருந்தாலும் வசதியாக இருந்தாலும் மனிதத்தில் புனிதம் காப்பவர்களே மகத்தானவர்கள்.