கவியும் நானும்
- டிலாணி ஸ்ரீதரன்
நிறைவேறாத ஆசைகளும்
நிழலாய்க் கவித்தொடுக்க
வழிமாறா வலிகளும்
வழியில் நீர் சுரக்கும்,
கருவறையற்ற எழுத்தாணியும் கருத்துகளை பிரசவிக்க
எல்லையற்றத் தொடராக
ஏட்டில் இடம்பிடிக்கும்,
கண்டநொடி சிந்தையிலே
கற்பனையில் தான்மிதக்க
உயிர் நாடியும் உருமாறி
உள்ளத்தை உருக்கும்,
ஏங்கும் கவலையிலே விடியலும் உதயமாக
தாங்கும் சோகங்கள் கண்ணீரில் கதையளக்கும்,
கனக்கும் நிமிடத்தை கவிதையாய் வடிக்க
வணக்கம் சொல்லியே பேனாவும் வரவேற்கும்,
வியக்கும் வாழ்க்கைக்கு விடைக் கிடைக்காதா என்று
மயக்கும் மாலையும் மனதில் மந்திரம்போடும்,
பட்டபாடு மறந்துவிட பக்கமிருந்த பஞ்சணையும்
தொட்டுவிடு புத்தகத்தையென
தோழனாய் ஆறுதலளிக்கும்,
இன்பங்களை வடித்திட வரிகளாக விதைத்திட
துன்பங்கள் களைந்து இதழோரம் புன்னகைக்கும்,
எண்ணத்து கடலினிலே என்னாசைகள் மூழ்கியிருக்க
வண்ணத்துப்பூச்சியாய்
வருடல்கள் முத்தமிடும்,
காதலுக்குப் பாட்டுரைக்க
வந்த மகராசனும்
மோதலுக்கு வழிவகுக்க மோகத்தில் முகம்மலரும்,
ஆயுளுக்கும் உயிராக வரமொன்று நான் கேட்டிட தூவலுக்கும் கவியெழுதி
துவண்டு கைவலிக்கும்,
எழுதுகோலில் மைதீர்ந்திட
எழுதியவை எல்லாம் விழுதுபோல் வலிமையாக
விண்ணிலும் காவியம் பாடும்,
தலக்கணமற்ற தாய்மொழித்
தமிழைத் தானுரைக்க இலக்கணமற்ற இரவுகளும்
இயலில் தவழும்,
பொன்னும் பொருளும் புவியில் நாடாளும்
மின்னும் எழுத்தது
மிடுக்கோடு புகழ் சேர்க்கும்
காரிகை நானும்
காரியத்தில் கண்ணாயிருக்க தூரிகையின் உதவியோடு
தூவிய அடுப்படிக் கீறல்கள்,
இன்னும் சொல்லவா? இனிமைகள் சேர்க்கவா?
மண்ணும் வாழ்த்திட மாலைகள் சூடவா?